தமிழர் மறுகுடியேற்றத்தை விரைவுபடுத்த இலங்கை செல்கிறேன்-எஸ்.எம்.கிருஷ்ணா
டெல்லி: இலங்கையில் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை மீள்குடியேற்றும் செய்வதை விரைவுபடுத்துவதற்காக விரைவில் இலங்கை செல்லவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
லோக்சபாவில் புலம் பெயர்ந்த தமிழர்கள் தொடர்பாக கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
அப்போது கிருஷ்ணா கூறுகையில்,
உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இந்திய அரசு தொடர்ச்சியாக உதவி செய்து வருகிறது. மறுகுடியமர்த்தப்பட்டுள்ள தமிழர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசை இந்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
போர் நடைபெற்ற பகுதியில் இந்திய அரசு சிறப்பு வாய்ந்த மருத்துவமனையை அமைத்துள்ளது. இதுவரை 50 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். பலருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனை உலகத் தரத்தில் அமைந்துள்ளது. சூழ்நிலைக்கு ஏற்ப வரும் நோய்களை கட்டுப்படுத்தும் நிபுணர்களும் அங்கு உள்ளனர். இதுதவிர ஏராளமான மருத்துவ உபகரணங்களும் தமிழர் பகுதிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழர்கள் விவசாயம் உள்ளிட்ட தொழில்களில் மீண்டும் ஈடுபட்டு சுய கவுரவத்தோடு வாழ வேண்டும் என்பதற்காக, இந்திய அரசு பல்வேறு வகைகளில் உதவி செய்து வருகிறது. விவசாய தொழில்களை எளிதாக மேற்கொள்ள அதிநவீன் மேலாண்மை கருவிகள் இலங்கை தமிழர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வேளாண்மைத்துறை நிபுணர் குழு தமிழர் பகுதிகளில் சென்று ஆய்வு மேற்கொண்டது. விவசாயத்தை தொடங்குவதற்கு தேவையான ஆரம்ப கட்ட உதவிகள் செய்யப்பட்டன. மேலும் விதைகள், டிராக்டர்கள் போன்றவகைகளும் தமிழர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் வடக்கு பகுதியில் குடியேறியுள்ள தமிழர்களுக்கு இந்தியா சார்பில் 50 ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்பட உள்ளது. முதல் கட்டமாக ஆயிரம் வீடுகள் விரைவில் கட்டி முடிக்கப்படும். 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முகாம்களில் உள்ள அனைத்து தமிழர்களும் மறுகுடியமர்த்தப்படுவார்கள்.
கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் 7 இந்திய குழுக்கள்:
இலங்கையில் வடக்குப் பகுதியில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் 7 இந்தியக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
வடக்கு, கிழக்கு, மத்திய பிராந்தியங்களின் போக்குவரத்து சேவை துண்டிக்கப்பட்டிருந்தது. இப்பகுதிகளுக்கு இடையே மீண்டும் மக்கள் சகஜமாக சென்றுவரும் நோக்கில் 55 பஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.
வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் ஏற்படுத்தப்படும் ரயில்வே கட்டமைப்பு, துறைமுகம், திரிகோணமலையில் நிறுவப்படும் அனல்மின் நிலையம், யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படும் கலாசார மையம் உள்பட இன்னும் ஏராளமான திட்டங்களுக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டி வருகிறது.