கருணாநிதிக்கு சோனியாவின் கோபத்திற்கு ஆளாக கூடாது என்ற கவலை-பினாங்கு துணை முதல்வர் ராமசாமி
இது குறித்து பினாங்கு துணை முதல்வர் ராமசாமி கூறியிருப்பதாவது,
முதல்வர் கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழக உள்துறை இந்திய அரசைக் கேட்டுக் கொண்டதற்கிணங்க, நானும் பார்வதி அம்மாளைப் போல எச்சரிக்கைப் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளேன்.
இலங்கையில் ராஜபக்சேவின் தமிழின அழிப்புப் போரில் இந்திய நிலைப்பாட்டை நான் கடுமையாக விமர்சித்து வந்தேன். இருண்ட மேகம் தமிழர்களைச் சூழ்ந்துக் கொண்டபோது துயர் துடைக்க கருணாநிதி ஒன்றும் செய்யவில்லை. என்வே, நான் கவலையோடு கலைஞரிடம் ஏதாவது செய்யுங்களேன் என்றேன்.
ஆனால், கருணாநிதிக்கு சொக்கத் தங்கம் சோனியா காந்தியின் கோபத்திற்கு ஆளாகிவிடக் கூடாது என்ற கவலை மட்டும் தான் இருந்தது.
ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்கும் ராஜபக்சேவும் அவர் பரிவாரங்களும் இந்தியாவிற்கு வரலாம், ராஜமரியாதையோடு விருந்துண்டு மகிழலாம். ஆனால், அழிக்கப்படும் என் தமிழ் இனத்திற்காகப் பேசும் என்னைப் போன்றவர்கள் இந்தியாவுக்குள் வர முடியாது. நாங்கள் வரவும் கூடாது என்பது தான் அவர்களின் நோக்கம் என்று அவர் கூறினார்.