மதமாற்ற பிரச்சாரம் செய்த சபை ஊழியர் உள்பட 8 பேர் மீது வழக்கு
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே மதமாற்ற பிரச்சாரத்தில் ஈடுபட்ட சபை ஊழியர் உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சங்கரன்கோவில் அருகே உள்ள பனவடலிசத்திரத்தைச் சேர்ந்தவர் வனராஜ். ஆட்டோ டிரைவரான இவர் நல்லசமரிடன் சபையில் ஊழியராக உள்ளார். நேற்று மதியம் வனராஜ் தலைமையில் ஒரு பெண் உள்பட 8 பேர் கொண்ட குழுவினர் குருக்கள்பட்டி பகுதியில் கிறிஸ்தவ மதம் தொடர்பான துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர். அப்போது அவர்கள் கிராம மக்களிடம் நீங்கள் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றினால் மாதம் ரூ. 400 வழங்கப்படும் என கூறியதாக தெரிகிறது.
இது குறித்து இந்து முன்னணியின் மாநிலக் கொள்கை விளக்கப் பேச்சாளர் இளங்கவி அரசன் என்பவர் சின்னகோவிலன்குளம் போலீசில் புகார் செய்தார். அவர் தன் புகார் மனுவில் இந்து மதத்தை இழிவுபடுத்தி கிறிஸ்தவ மதத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செயவதாக குறிப்பிட்டிருந்தார்.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் திருமலை கொழுந்து, ஆட்டோ டிரைவர் வனராஜ் உள்பட 8 பேர் மீது பொய் சொல்லி மதம் மாற்றுவது, துண்டு பிரசுரம் மூலம் இந்து கடவுளுக்கு விரோதமாக செயல்பட்டது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.