கோவிலில் கிடைத்த 27 தங்க காசுகளுடன் கும்பல் மாயம்
விருத்தாச்சலம்: கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே கோவிலில் கிடைத்த 27 தங்கக் காசுகளுடன் மாயமானவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
விருத்தாசலம் அருகே அரசக்குழியை அடுத்த ஊத்தங்கால் அகரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடந்த சீரமைப்பு பணியின்போது தங்க புதையல் கிடைத்தது.
பணியில் ஈடுபட்ட காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீகாஞ்சி கிராமத்தை சேர்ந்த முனுசாமி, சஞ்சீவி, ராமு ஆகியோர் 46 தங்க காசுகளை எடுத்தனர்.
அதனை பங்குபோட்டுக் கொண்ட அவர்கள் திடீரென தலைமறைவானார்கள்.
காண்டிராக்டர் துரை தங்க காசில் பங்கு வேண்டும் என்று கேட்டு மிரட்டியதால் முனுசாமி தங்க காசுகளுடன் திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் இருந்து 19 தங்க காசுகள் மீட்கப்பட்டது. பின்னர் அந்த தங்கக் காசுகளை போலீசார் திருக்கோவிலூர் உதவி கலெக்டர் பிருந்தாவிடம் ஒப்படைத்தார்.
இதற்கு ஊத்தங்கால் அகரம் ஊர் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கோவிலில் கிடைத்த தங்க காசு புதையலை விருத்தாசலம் உதவி கலெக்டரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவர்கள் விருத்தாசலம் தாசில்தாரிடம் முறையிட்டுள்ளனர்.
மேலும் கோவிலில் கிடைத்த 46 தங்க காசுகளில் 19 தங்க காசுகள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. 27 தங்கக் காசுகளுடன் மாயமான சஞ்சீவி, ராமு ஆகியோரை பிடிக்க போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற ஆதங்கத்திலும் மக்கள் உள்ளனர்.
இதற்கிடையே கோவிலில் மேலும் பல தங்ககாசு புதையல் இருக்கலாம் என்று அந்த கிராம மக்கள் மனதில் எண்ணம் தோன்றி உள்ளது. இதனால் ஊத்தங்கால் அகரத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்கள் கோவிலுக்கு வந்து பார்த்து செல்கின்றனர்.












Click it and Unblock the Notifications