வலையை வீசி விட்டார் ஜெ.-234 மீன்களும் சிக்கும்: மது பேச்சு
சென்னை: ஜெயலலிதா கடலில் வலையை வீசி விட்டார். 234 மீன்களையும் ஒரு மீன் கூட நழுவால் லாவகமாக பிடிப்பார் என்று கூறியுள்ளார் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன்.
வடசென்னை மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் எழும்பூர் மோத்தி மகாலில் நடந்தது. மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் கலந்து கொண்டு மது சூதனன் பேசுகையில்,
வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வினர் கடுமையாக உழைத்து ஜெயலலிதாவுக்கு வெற்றிக் கனியை சமர்ப்பிக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் எதிரிகளை வீழ்த்துகிற படைதான் புரட்சித்தலைவியின் படை. தேர்தலில் அதை நிரூபிக்க வேண்டும்.
தேர்தல் களத்தில் ஜெயலலிதா நேர்த்தியாக கடலில் வலையை வீச இருக்கிறார். இதில் 234 தொகுதிகளிலும் ஒரு மீனை கூட நழுவ விடாமல் பிடித்து வெற்றிக் கொடி நாட்டுவார்.
கோவை, திருச்சியில் ஜெயலலிதா கூட்டங்களுக்கு மக்கள் அலை கடலென திரண்டனர். இதனால் சில கட்சிகள் குமுறிக் கொண்டிருக்கின்றன. ஜெயலலிதாவுக்கு ஆதரவு பெருகி இருப்பதை இக்கூட்டங்கள் பறைசாற்றியுள்ளன.
கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். நாம் தேர்தல் பணியை தொடங்குவோம் என்றார்.