பெங்களூர் குண்டுவெடிப்புகள்: தீவிரவாதிகளுடன் தொடர்பை ஒப்புக் கொண்ட மதானி
பெங்களூரில் 2008ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த நாசீர், சர்பார் நவாஸ், முனாப், முஜீப், சக்காரியா ஆகியோரை பெங்களூர் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரித்தபோது மதானியிடம் ஆலோசனை நடத்திவிட்டே இந்த குண்டு வெடிப்புகளை நடத்தியதாக வாக்குமூலம் அளித்தனர்.
இதையடு்த்து மதானியையும் குற்றவாளி பட்டியலில் போலீசார் சேர்த்து அவரைக் கைது செய்தனர். அவரிடம் பெங்களூர் போலீசார் விசாரித்தபோது தனக்கும் குண்டுவெடிப்புக்கும் சம்பந்தமில்லை என்று மறுத்துவந்தார்.
ஆனால் மதானியுடன் குண்டுவெடிப்பை நடத்தியவர்கள் தொலைபேசியில் பேசியதற்கான ஆதாரங்களை போலீசார் காட்டினர்.
இதையடுத்து மதானி அவர்களுடனான தொடர்பை ஒப்புத் கொண்டதாகத் தெரிகிறது.
பெங்களூர் குண்டு வெடிப்பு பற்றி எனக்கு முன் கூட்டியே தெரியும். இது தொடர்பாக அவர்கள் என்னிடத்தில் பேசினர். நான் அவர்களை எச்சரிக்கையாக இருக்கும்படி கூறினேன் என்று மதானி கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கிரிக்கெட் ஸ்டேடிய குண்டுவெடிப்பி்ல் தொடர்பில்லை:
அதே நேரத்தில் பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் ஸ்டேடிய குண்டுவெடிப்பில் மதானிக்குத் தொடர்பில்லை என்று போலீசார் மறுத்துள்ளனர்.
முன்னதாக இதி்ல் அவருக்குத் தொடர்புள்ள கர்நாடக உள்துறை அமைச்சர் ஆச்சார்யா கூறிருந்தார். அவர் கூறுகையில், சின்னச்சாமி ஸ்டேடிய குண்டுவெடிப்பில், மதானிக்குத் தொடர்பு உள்ளது தெரிய வந்துள்ளது என்றார்.
ஆனால் பெங்களூர் போலீஸ் கமிஷனர் சங்கர் பிதரி இதை மறுத்தார். ஸ்டேடிய குண்டு வெடிப்பில் மதானியின் தொடர்புகள் குறித்து இதுவரை நிரூபணமாகவில்லை. உள்துறை அமைச்சர் கூறிய கருத்துக்கள் குறித்து எனக்குத் தெரியாது. அதுகுறித்து கருத்து தெரிவிக்க நான் விரும்பவில்லை. தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்றார்.
இதையடுத்து அமைச்சர் ஆச்சாரியாவும் தனது நிலையை மாற்றிக் கொண்டுவிட்டார். மதானிக்கு ஸ்டேடிய குண்டுவெடிப்பில் தொடர்பிருப்பதாக நான் சொல்லவே இல்லை என்றார்.
இந் நிலையில் மதானியின் மனைவி சூபியாவையும் பெங்களூர் போலீஸார் விசாரிக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
2008ம் ஆண்டு ஜூலை மாதம் பெங்களூர் நகரில் தொடர் குண்டுவெடிப்புகள் நடந்தன. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். 20 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கில்தான் தற்போது மதானி கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு பெங்களூர், மும்பை ஐபிஎல் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி தொடங்கவிருந்த நிலையில், சின்னச்சாமி ஸ்டேடியத்தில் 2 குண்டுகள் வெடித்தன. இதில் 15 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.