தமிழகத்தை 6 அதிகார மையங்கள் ஆட்சி செய்து வருகின்றன: வைகோ
நாமக்கல்: தமிழகத்தை 6 அதிகார மையங்கள் ஆட்சி செய்து வருகின்றன என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
மதிமுக சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் நடந்து வரும் கொடி பயணத்தில் பல்வேறு இடங்களில் கட்சிக் கொடியேற்றி வைத்து அவர் பேசுகையில்,
தமிழகத்தில் இயற்கை வளம் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன. மணல் கொள்ளையால் நதி வளம் குறைந்து வருகிறது. கிரானைட் கற்களுக்காக மலைக் குன்றுகள் சுரண்டப்பட்டு வருகின்றன.
தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற யானை மலையை பெயர்த்து எடுக்கவும் டெண்டர் விடப்பட்டது. மக்கள் எதிர்ப்பு காரணமாகவும், மதிமுக போராடும் என அறிவித்ததைத் தொடர்ந்தும் அந்த அரசாணை ரத்து செய்யப்பட்டது.
தமிழகத்தை 6 அதிகார மையங்கள் ஆட்சி செய்து வருகின்றன. முல்லைப் பெரியாறு, காவிரி, பாலாறு என அனைத்து நதிகளையும் அண்டை மாநிலங்கள் அபகரிக்க ஆங்காங்கே அணை கட்ட துவங்கியுள்ளன.
இவற்றை தடுத்து நிறுத்த தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தடுத்த நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்கிறது தமிழக அரசு.
முதல்வர் கருணாநிதி முனைப்புடன் செயல்பட்டிருந்தால் மத்திய அரசை வலியுறுத்தி இலங்கையில் போர் நடைபெறாமல் செய்திருக்க முடியும். லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள். ஆனால், ஆட்சி பறிபோகும் என்ற காரணத்தினாலேயே மத்திய அரசின் போர் ஒத்துழைப்புக்கு திமுக அரசும் ஆதரவாக இருந்துவிட்டது.
அதிமுக கூட்டம் நடத்தும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் கூடுவதை அறிந்து அதிமுக கூட்டம் நடத்திய இடங்களிலேயே திமுக பொதுக் கூட்டத்தையும் தமிழக முதல்வர் நடத்தி வருகிறார். இது அவரது தோல்வி பயத்தையே காட்டுகிறது.
அதிமுகவுக்கு பின்னால் செல்வதே திமுக பின் தங்கியுள்ளதை எடுத்துக் காட்டுகிறது.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக எஸ்எம்எஸ் அனுப்பிய இளைஞர்கள் கைது செய்யப்படுகின்றனர். தமிழகத்தில் ஜனநாயக ஆட்சி நடைபெறவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications