பஸ் ஊழியர்கள் மீது தாக்குதல்-திடீர் ஸ்டிரைக்-பொதுமக்கள் கடும் பாதிப்பு
சென்னை: போக்குவரத்துக் கழக டிரைவரை ஒரு கும்பல் தாக்கியதைத் தொடர்ந்து சென்னை அண்ணா சாலையில் இரவில் பஸ்களை தாறுமாறாக நிறுத்தி பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் குதித்தனர். இதனால் பொதுமக்களும், பயணிகளும் கடும் பாதிப்பை சந்தித்தனர்.
சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் இரவுப்பணிக்காக ஒரு டிரைவர் நேற்று தங்கியிருந்தார். நேற்றிரவு 10 மணி அளவில் அவர், சாப்பிடுவதற்காக சின்னமலை ராஜீவ்காந்தி சிலை அருகில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்றார். அங்கு சாப்பிட்டு விட்டு புறப்படும் போது, அங்கே வந்த ஒரு கும்பலைச் சேர்ந்த 5 பேருக்கும், அவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது.
இதில், அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள், மாநகரப் போக்குவரத்துக் கழக டிரைவரை சரமாரியாக தாக்கியதாகத் தெரிகிறது. இதில் காயம் அடைந்த அந்த ஊழியர், பணிமனைக்கு சென்று தான் தாக்கப்பட்டதை கூறினார்.
இதைத் தொடர்ந்து, அங்கிருந்த மாநகரப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள், சின்னமலையில் இரவு 10.45 மணி அளவில் சாலையில் அமர்ந்து போக்குவரத்தை மறித்தார்கள். சக ஊழியரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என்று கூறினார்கள். இதனால், அண்ணாசாலையில் வாகனங்கள் நகர முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த தகவலை அறிந்து மாநகரப் போக்குவரத்துக் கழக பஸ்களும் சில இடங்களில் நிறுத்தப்பட்டது. இதனால், அண்ணாசாலையில், சின்னமலையில் இருந்து தேனாம்பேட்டை வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தன. இந்த போராட்டம் சுமார் 12 மணி வரை நீடித்தது. பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
எந்த வாகனமும் செல்ல முடியாமல் பஸ்கள் தாறுமாறாக நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பட்ட அவதி மிகக் கடுமையாக இருந்தது.












Click it and Unblock the Notifications