சீனாவின் வட பகுதிகளைத் தாக்கக் கூடிய அக்னி-5 ஏவுகணை விரைவில் சோதனை-அந்தோணி

ஹைதராபாத் வந்த அந்தோணி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இந்திய விஞ்ஞானிகள் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறார்கள். தற்போது 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கக்கூடிய அக்னி-5 ஏவுகணையை தயாரித்து சாதனை படைத்துள்ளனர். இதன் பரிசோதனை விரைவில் நடத்தப்படும்.
இந்த ஏவுகணை சீனாவின் வடக்கு பகுதியை தாக்கும் சக்தி படைத்தது. கண்டம் விட்டு கண்டம் தாவும் இந்த ஏவுகணையை பார்த்து மற்ற நாட்டினர் மிரட்சி அடைந்துள்ளனர். பாதுகாப்பு துறைக்கு ஏராளமான இளம் விஞ்ஞானிகளை சேர்க்க திட்டமிட்டுள்ளோம்.
பாதுகாப்பு துறையில் தனியார் நிறுவனங்களை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. வளர்ச்சி அடைந்த நாடுகள் நமக்கு உதவி செய்யாவிட்டாலும் கூட நம்மால் சொந்தமாக சக்தி வாய்ந்த ஏவுகணையை உருவாக்க முடியும் என்பதை நமது விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். அக்னி-5 ஏவுகணை பாதுகாப்புத் துறைக்கு அதிக பலம் சேர்ப்பதாக உள்ளது. இதே போல் தொடர்ந்து அதிக சக்தி வாய்ந்த ஏவுகணைகள் தயாரிக்கப்படும் என்றார்.
இந்தியாவை மெதுவாக சுற்றி வளைத்து வருகிறது சீனா. காஷ்மீரின் லடாக் பகுதியில் அடிக்கடி ஊடுறுவுகிறது. காஷ்மீரை இந்தியாவே கிடையாது என்று கூறி தனி விசாவை அறிமுகப்படுத்தி அட்டகாசம் செய்கிறது. நேபாளம் வழியாக இந்தியாவுக்கு அவ்வப்போது குடைச்சலைக் கொடுக்கிறது. அருணாச்சலப் பிரதேசத்தை முழுமையாக சொந்தம் கொண்டாடுகிறது.
இதுபோதாதென்று புதிதாக தற்போது இலங்கையில் நிலை கொண்டுள்ளது. இலங்கை மூலமாக தென்னிந்தியாவை முழுமையான அளவில் அது தனது கண்காணிப்பின் கீழ் கொண்டு வர ஆரம்பித்துள்ளது.
இதனால் இந்தியாவின் நிலை இதுவரை இல்லாத அளவுக்கு மிக மிக இக்கட்டானதாக மாறியுள்ளது. எனவே சீனாவுக்கு எதிராக அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அக்னி- ஒரு அனல் பார்வை:
இந்தியாவின் அக்னி ஏவுகணை வரிசையில் இதுவரை 3 ஏவுகணைகள் வந்து விட்டன.
அக்னி-1 ஏவுகணை 500 முதல் 700 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து தாக்கக்கூடியது. அக்னி 2 ஏவுகணை 2000 முதல் 2500 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து தாக்கக் கூடியது.
அடுத்து மேம்படுத்தப்பட்ட அக்னி 2 ஏவுகணை. இது 2750 முதல் 3000 கிலோமீட்டர் தூரம் வரை பாயக் கூடியது.
அக்னி 3 ஏவுகணையின் தாக்குதல் தூர திறன் 3000 முதல் 3500 கிலோமீட்டர் வரையாகும்.
அக்னி 4க்குப் பதில் இந்தியா அதிரடியாக அக்னி 5க்கு வந்து விட்டது. இது கண்டம் விட்டுக் கண்டம் பாயும் அதி நவீன அதிரடி ஏவுகணையாகும். இதன் தாக்குதல் தூரம் 5000 முதல் 6000 கிலோமீட்டர் தூரம் வரையாகும். அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று தாக்கும் வல்லமை படைத்தது இந்த ஏவுகணை. சீனாவின் மிரட்டலுக்கு அக்னி 5 தான் சரியான பதிலடியாக இருக்கும் என்பதால் இந்தியா இந்த ஏவுகணையின் வெற்றியை பெரிதும் எதிர்பார்த்துள்ளது.












Click it and Unblock the Notifications