வட மாநிலங்களில் கனமழை-ரூ.1000 கோடி பட்டாசுகள் சிவகாசியில் தேக்கம்
குட்டி ஜப்பான் எனப்படும் சிவகாசி பட்டாசு தயாரிப்பதில் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. இங்கு 750 பட்டாசு ஆலைகள் உள்ளன. தீபாவளி விற்பனைக்காக வடமாநிலங்களுக்கு ஜூலை இறுதி வாரத்தில் பட்டாசுகள் லாரிகளில் அனுப்பி வைக்கப்படும்.
தற்போது அங்கு கனமழை பெய்து வருவதால் பட்டாசுகளை வாங்க வடமாநில வியாபாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். கடந்த மாதம் கரு திரிகளை அகற்றயபோது ஏற்பட்ட வெடி விபத்தில் 8 அதிகாரிகள் பலியானார்கள். இதையடுத்து கருதிரி தயாரிப்பு பணிகள் முடங்கி விட்டன. அந்த திரிகள் வந்தால் மட்டுமே சிறிய பட்டாசு ஆலைகளில் தயாராகும் பட்டாசு பணிகள் முழுமையடையும்.
இதனால கடந்த ஒரு மாதமாக சிறிய பட்டாசு நிறுவனங்கள் தயாரிப்பு பணிகள் முழுமையாக முடங்கியுள்ளன. தரமான பட்டாசுகள் 60 சதவீதமும், சிறிய நிறுவனங்கள் தயாரிக்கும் பட்டாசுகள் 40 சதவீதமும் வாங்கும் வியாபாரிகள், சிறிய நிறுவனங்களில் ஆர்டர் கொடுத்தும் வாங்க முடியாமல் உள்ளனர்.
அதனால் இன்று வரை வடமாநிலங்களுக்கு பட்டாசு லாரிகள் லோடு ஏற்றி செல்லாமல் ஏராளமான லாரிகள் சிவகாசி பகுதியில் காத்து கிடக்கின்றன. வழக்கமாக தீபாவளி சீசன் நேரங்களில் நடக்கும் ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.