15வது நாளாக தொடரும் விசைப் படகு மீனவர் போராட்டம்-ரூ. 16 கோடி இழப்பு
தூத்துக்குடி : தூத்துக்குடியில் விசைப் படகு மீனவர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்தப் போராட்டம் 15வது நாளை எட்டியுள்ளது. இதனால் ரூ. 16 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மீன்பிடிதுறைமுகத்தில் சுமார் 247 விசைப்படகுகள் உள்ளன. இந்த படகுகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் தொழிலாளர்கள் பங்கு தொகையை 35 சதவிதத்தில் இருந்து 45 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வேலை நிறுத்த போரட்டம் நடத்தினர். இது தொடர்பாக தொழிலாளர்கள், உரிமையாளர்கள் இடையே பலகட்ட பேச்சு வார்த்தை நடந்தன. ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் இருந்தது. நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் பிரகாஷ் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதி்ல் இருதரப்பினருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து நேற்று படகுகள் கடலுக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விசைப்படகு உரிமையாளர்கள் பலர் கூடுதல் ஊக்கதொகை கொடுப்பதாக ஏற்பட்ட உடன்பாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் மீண்டும் சிக்கல் ஏற்பட்டது. இதனால் நேற்றும் படகுகள் கடலுக்கு செல்லவில்லை. தொடர்ந்து மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்று 15வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதன் காரணமாக மீன்பிடி தொழிலில் 16 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications