For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முதல்வர் கருணாநிதியை சந்திக்க உதவ வேண்டும்-கனிமொழியிடம் சாந்தி கோரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் கருணாநிதியை சந்திக்க ஏற்பாடு செய்து, எனக்கு உதவுங்கள் என்று முதல்வரின் மகளும், திமுக ராஜ்யசபா உறுப்பினருமான கனிமொழியை சந்தித்து தடகள வீராங்கனை சாந்தி கோரிக்கை விடுத்தார்.

2006ம் ஆண்டு தோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் சாந்தி வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆனால் அவருக்கு நடத்தப்பட்ட பாலின சோதனையின்போது அவருக்கு ஆண் தன்மை அதிகம் இருப்பதாக முடிவு தெரிவித்ததாக கூறி பதக்கத்தை பறிமுதல் செய்து விட்டனர்.

இதனால் மனம் உடைந்து போனார் சாந்தி. இருப்பினும் அவருக்கு முதல்வர் கருணாநிதி பதக்கம் வென்றபோது அறிவித்தபடி பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச்சான்றிதழை அளித்தார். அவருக்கு புதுக்கோட்டை மாவட்ட தடகள தற்காலிகப் பயிற்சியாளர் வேலையையும் வழங்கி உத்தரவிட்டார்.

ஆனால் அந்த வேலை மூலம் கிடைக்கும் வருவாய் போதுமானதாக இல்லாததால் பெரும் சிரமத்தில் உள்ளார் சாந்தி. ஊதிய உயர்வு கோரி அவர் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த பயனும் இல்லாததால், அந்த வேலையை அவர் ராஜினாமா செய்து விட்டார்.

இந்த நிலையில் சனிக்கிழமை சென்னை வந்த சாந்தி, கனிமொழியை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், எனக்கு மூன்று சகோதரிகளும், ஒரு சகோதரனும் உள்ளனர். எனது பெற்றோர் கூலி வேலை செய்து வருகின்றனர். நான் மட்டுமே குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய பாரத்தை சுமந்து வருகிறேன். எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளேன்.

முதல்வரை அணுகி எனது கோரிக்கைகளை தெரிவித்து நிவாரணம் பெற விரும்புகிறேன். அதற்கு நீங்கள்தான் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

பின்னர் இதுகுறித்து கனிமொழி கூறுகையில், சாந்தி சொல்வது சரியாக இருந்து, அவருடைய கோரிக்கையில் நியாயம் இருந்தால், நிச்சயம் அவருக்கு உதவ முதல்வர் நடவடிக்கை எடுப்பார்.

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கேஸ்டர் செமன்யாவுக்கு இதேபோல பிரச்சினை வந்தபோது ஒட்டுமொத்த தென் ஆப்பிரிக்காவும் உதவியது. அதேபோல சாந்தி விஷயத்திலும் இந்திய அரசு உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாந்திக்குக் கொடுக்கப்பட்ட பதக்கம் பறிக்கப்பட்டபோதிலும் கூட, அவரை தமிழக அரசு ஆதரித்தது. அவருக்கு அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகையை முதல்வர் வழங்கினார். இதை ஒட்டுமொத்த நாடும் பின்பற்ற வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் அவரவர் குறிக்கோளை அடையும் வேட்கை இருக்கும். நாட்டுக்காக ஓட வேண்டும் என்பது மட்டுமே சாந்தியின் ஆசையாக உள்ளது. ஒரு தடகள வீராங்கனையாக அவரது குறைந்தபட்ச ஆசை அதுவாகத்தான் இருக்க முடியும் என்றார் கனிமொழி.

பின்னர் இன்று நடைபெறும் சென்னை மினி மராத்தான் ஓட்டத்தில் கலந்து கொள்ள வருமாறு சாந்திக்கு கனிமொழி அழைப்பு விடுத்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X