காமன்வெல்த் போட்டி மைதானம்-பிரதமர் நேரில் ஆய்வு
காமன்வெல்த் விளையாட்டுக்கான ஸ்டேடியங்கள் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இன்னும் முடிந்தபாடில்லை. இன்னும் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இது போதாதென்று ஏகப்பட்ட ஊழல் புகார்கள் வேறு.
இதையடுத்து மத்திய அரசு தலையிட்டது. முதலில் அமைச்சர் ஜெயபால் ரெட்டி தலைமையிலான அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது. பின்னர் 11 அரசு அதிகாரிகள் அடங்கிய கமிட்டிஅமைக்கப்பட்டது. இதன் மூலம் சுரேஷ் கல்மாடி முன்பு குவிந்து கிடந்த அதிகாரங்கள் பறிக்கப்பட்டன.
இந்த நிலையில் இன்று பிரதமர் மன்மோகன் சிங் அதிரடியாக நேரடி ஆய்வில் குதித்தார்.
போட்டி தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நடைபெறும் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்திற்குச் சென்று அங்குள்ள வசதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விளையாட்டு மைதானம், மீடியாக்காரர்களுக்கான வசதிகள், ராயல் பாக்ஸ், ஸ்டேண்டுகள், பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து பார்வையிட்டு விளக்கம் கேட்டார்.
பின்னர் அவர் கூறுகையில், இது அழகான மைதானம். இங்கு அனைத்துப் பணிகளையும் விரைவில் முடிக்க வேண்டியது அவசியம். எந்த வேலையாக இருந்தாலும் விரைவில் முடித்து விடுங்கள் என்று அறிவுரை கூறினார்.
அக்டோபர் 3ம் தேதி காமன்வெல்த் போட்டிகள் தொடங்குகின்றன. 14ம் தேதி வரை நடைபெறவுள்ளன. இவற்றுக்கான ஸ்டேடியங்கள் அனைத்தையும் செப்டம்பர் 15ம்தேதிக்குள் கொடுத்து விட வேண்டும் என டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் அதற்குள் முடியுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை.