மதுரைக்கு வரக் கூடாது-வந்தால் கொல்லப்படுவீர்கள்: ஜெ.வுக்கு கொலை மிரட்டல்
சென்னை: மதுரை கூட்டத்தை ஜெயலலிதா ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் ஜெயலலிதாவும் மற்றவர்களும் மதுரையில் கொடூரமாக குண்டு வைத்துக் கொல்லப்படுவார்கள் என்று கூறி ஜெயா டிவி அலுவலகத்திற்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
மதுரையில் அதிமுக சார்பில் தென் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் ஒரு நாளில் ஜெயலலிதா தலைமையில் பிரமாண்ட பொதுக் கூட்டத்திற்கு மதுரை அதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.
கோவை, திருச்சி கூட்டங்களைத் தொடர்ந்து மதுரையில் நடைபெறப் போகும் இந்தக் கூட்டத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில் ஜெயா டிவி துணைத் தலைவர் ரங்கராஜன் தமிழக டிஜிபி லத்திகா சரணுக்கு ஒரு புகார் கடிதம் கொடுத்துள்ளார்.
'அண்ணனை' பகைக்காதே!
அதில்,
சென்னை ஈக்காடுதாங்கலில் உள்ள ஜெயா டிவி அலுவலகத்திற்கு 28.08.2010 அன்று மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது. அறிவொளி மதி என்ற பெயரில், கள்ளந்திரி என்ற இடத்திலிருந்து வந்துள்ள கடிதத்தில், மதுரை கூட்டத்தை ஜெயலலிதா ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் ஜெயலலிதாவும், அவரது கூட்டத்தினரும் மதுரையில் கொடூரமாக குண்டு வைத்து கொல்லப்படுவார்கள்.
சாக மதுரைக்கு போங்கள். இதை நேரடியாக ஒளிபரப்ப ஜெயா டிவி மதுரைக்கு வரவும். அண்ணனை பகைக்காதே; மதுரைக்கு வராதே. ஜெயாவை ஒழித்துக் கட்டுவோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரான ஜெயலலிதாவுக்கு மிரட்டல் விடுத்து, கடந்த பல ஆண்டுகளில் இதுபோன்ற நிறைய கடிதங்கள் ஜெயா டிவி அலுவலகத்திற்கு வந்துள்ளன. அதுபற்றி போலீசுக்கு நாங்கள் புகார் கொடுத்துள்ளோம்.
அதைபோல, தற்போதைய மிரட்டல் கடிதத்தையும் தங்களின் கவனத்திற்கு அனுப்பியுள்ளோம். எனவே, ஜெயலலிதாவுக்கும், ஜெயா டிவி மற்றும் அதன் ஊழியர்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, கேட்டுக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.