மதுரை: 2 ஜவுளி நிறுவனங்களில் பெரும் தீ-தீயணைப்பு வீரர்கள் போராட்டம்
மதுரை: மதுரையில் உள்ள 2 ஜவுளி நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க நேற்று நள்ளிரவு முதல் இன்று மதியம் வரை தீயணைப்பு வீரர்கள் போராடிக் கொண்டிருந்தனர்.
மதுரை திருமலைநாயக்கர் மகால் அருகில் உள்ள கட்டிடத்தின் 3-வது மாடியில் பாலாஜி கார்மெண்ட்ஸ், ராஜஸ்தான் கார்மென்ட்ஸ் என்னும் 2 ஜவுளி நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன.
நேற்று நள்ளிரவு ஜெனரேட்டர் என்ஜினில் இருந்து தீ கசிந்து இந்த 2 நிறுவனங்களுக்கும் பரவியது. தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு நள்ளிரவு 12 மணிக்கு வந்தனர்.
3-வது மாடி என்பதால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. கட்டிடம் இடிந்துவிடும் அபாயம் இருப்பதால் தீயணைப்புத் துறையினர் மிகுந்த எச்சரிக்கையுடன் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று நள்ளிரவு 12 மணி முதல் தொடங்கிய இந்தப் போராட்டம் இன்று மதியம் 1 மணி வரையிலும் நீடித்தது. தீயை அணைக்க முடியாமல் தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து போராடி வந்தனர்.
இன்னும் தீயை முழுமையாக அணைக்க முடியவில்லை. மதுரை மாநகராட்சி தீயணைப்புத் துறைக்கு போதிய வசதியில்லாததால் தான் இவ்வளவு நேரம் ஆகிறது என்று கூறப்படுகிறது. இந்த தீவிபத்தில் சேதம் அடைந்துள்ள பொருட்களின் மதிப்பு ரூ. 3 கோடிக்கும் மேல் ஆகும் எனத் தெரிகிறது.