அதிமுக தலைமையில் குழு அமைத்து அரசு கேபிள் டிவி குறித்து விசாரிக்க வேண்டும்-டாக்டர் கிருஷ்ணசாமி
சென்னை: அரசு கேபிள் டிவி நிறுவனம் அடக்கமாக செயல்படுகிறதா அல்லது அடக்கம் செய்யப்பட்டு விட்டதா என்பதை அதிமுக தலைமையில் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அரசு கேபிள் டி.வி. நிறுவனம் இப்போது அடக்கமாக செயல்படுவதாக முதல்வர் கருணாநிதி கூறுகிறார்.
ரூ.400 கோடி மக்கள் வரிப் பணத்தில் உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம் அடக்கமாக உள்ளதா? அல்லது அடக்கம் செய்யப்பட்டு விட்டதா? என்பதைக் கண்டறிய பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தலைமையில் விசாரணைக் குழு ஒன்றை அமைக்க வேண்டும்.
'எல்நெட்' நிறுவனம் மூலம் ரூ.700 கோடியில் உருவாக்கப்பட்ட 'இடிஎல்' நிறுவனம் எங்கு சென்றது என்பதைக் கண்டறிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். வீடற்ற ஏழை மக்களுக்கு 3 சென்ட் வீட்டுமனை, நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் விவசாய நிலம் இலவசமாக வழங்கப்படும் என்ற வாக்குறுதிகள் மூலமே திமுக தலைமையிலான கூட்டணி கடந்த 2006 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற முடிந்தது.
இந்த வாக்குறுதிகளை வரும் சட்டப்பேரவை தேர்தலுக்குள் நிறைவேற்றக் கோரியும், ஏழைகள் மற்றும் இளைஞர்களின் உடல் நலனை பாதிக்கக் கூடிய டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடக் கோரியும் கட்சியின் சார்பில் செப்டம்பர் 6-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் மும்முனை போராட்டம் நடத்தப்பட உள்ளது என்றார்.