ஆத்தூர் அருகே சாலை விபத்து-4 பாலிடெக்னிக் மாணவர்கள் பலி
சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சாலை விபத்தில் 4 பாலிடெக்னிக் மாணவர்கள் பலியானார்கள்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தேவியாக்குறிச்சியில் பாவேந்தர் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் படித்து வந்த மாணவர்கள் நேற்று கல்லூரி வகுப்பு முடிந்தவுடன் பேருந்தில் தங்கள் கிராமங்களுக்கு சென்றுள்ளனர்.
அப்போது முன்னால் சென்ற லாரியை முந்திய பேருந்து, திடீரென விபத்தில் சிக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே மேல்நாரியம்மனூரைச் சேர்ந்த வினோத், மணி, அம்மையார்குப்பத்தைச் சேர்ந்த பிரசாத், பெரிய சிறுவத்தூரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் ஆகியோர் இறந்தனர். 4 மாணவர்களும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
விபத்தில் படுகாயம் அடைந்த பிரபாகரன் என்ற மாணவர் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.