கோவை காங்கிரஸ் கூட்டத்தை கூண்டோடு புறக்கணித்த வாசன் கோஷ்டி
கோவை: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிப்பது மிக மிக எளிது என்று ஒரு பக்கம் பிரணாப் முகர்ஜி பேசினார். ஆனால் கோவையில் அவரது தலைமையில் நடந்த காங்கிரஸ் பொதுக் கூட்டத்தை மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கூண்டோடு புறக்கணித்தனர்.
ஜி.கே.மூப்பனார் உயிருடன் இருந்தபோது அவருடன் மிக நெருக்கமாக இருந்தவர் ப.சிதம்பரம். ஆனால் பின்னாளில் மூப்பனார் அதிமுகவுடன் கூட்டணி வைக்க முடிவு செய்தபோது அதை எதிர்த்து தமிழ் மாநில காங்கிரஸிலிருந்து வெளியேறி தனி அமைப்பு கண்டார்.
அதற்குப் பின்னர் மூப்பனார் மறைந்தார். அவரது மகன் ஜி.கே.வாசன் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரானார். பிறகு அதை காங்கிரஸுடன் இணைத்தார். இதையடுத்து ப.சிதம்பரம், வாசனுடன் இணைந்து செயல்படுவதில்லை, அதேபோல வாசனும், ப.சிதம்பரத்துடன் இணைவதில்லை. இருவரும் எதிரெதிர் துருவங்களாகவே உள்ளனர்.
தமிழக காங்கிரஸைப் பொறுத்தவரை வாசன் கையே ஓங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியிலும் சரி, இளைஞர் காங்கிரஸிலும் சரி வாசன் கோஷ்டிதான் பெரிய கோஷ்டியாக உள்ளது.இதை உடைக்க ப.சிதம்பரம், தனது மகன் கார்த்தி சிதம்பரம் மூலமாக கடுமையாக முயன்று வருகிறார். இதன் காரணமாக தற்போது ப.சிதம்பரம் கோஷ்டி நம்பர் 2 கோஷ்டியாக உருவெடுத்துள்ளது.
இதன் விளைவு இரு கோஷ்டிகளும் சமீப காலமாக மோதல் போக்கில் ஈடுபட்டுள்ளன. மதுரையில் நடந்த கக்கன் நூற்றாண்டு விழாவில் தங்களது பலத்தைக் காட்ட இரு கோஷ்டிகளும் கடுமையாக மோதின. இரு கோஷ்டியினரும் ஒரே மேடையில் இருப்பதை தொடர்ந்து தவிர்த்து வருகின்றனர்.
சமீபத்தில் காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, கடந்த ஜூலை 13ஆம் தேதி திருப்பூர் டவுன்ஹால் மைதானத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தது. மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் நடந்த அந்த பொதுக்கூட்டத்தை ஜி.கே.வாசன் மற்றும் குட்டி கோஷ்டியான பிரபு கோஷ்டியினர் புறக்கணித்தனர்.
இந்த நிலையில் நேற்று நடந்த கோவை பொதுக்கூட்டத்தையும் வாசன் கோஷ்டி புறக்கணித்தது. நேற்றைய கூட்டத்தில் ப.சிதம்பரத்தின் கை ஓங்கியிருந்ததாலும், அவர்களுக்கே முக்கியத்துவம் தரப்பட்டதாலும் வாசன் கூட்டத்திற்கு வரவில்லை. அவரது ஆதரவாளர்கள் யாரும் வரவில்லை. கோவை மேயர் வெங்கடாச்சலமும் வரவில்லை. பிரபு மற்றும் கோஷ்டியினரும் இக்கூட்டத்திற்கு வராமல் புறக்கணித்தனர்.
நிலைமை இப்படி இருக்க காங்கிரஸ் ஆட்சிக்கு வருவது ரொம்ப ரொம்ப ஈசி என்று பிரணாப் முகர்ஜி பேசியிருப்பது சிரிப்பை வரவழைக்கும் வகையில் உள்ளது.












Click it and Unblock the Notifications