சட்டசபைத் தேர்தலை சந்திக்க சிபிஎம் தயார்-ஜி.ராமகிருஷ்ணன்
கோவை: தமிழக சட்டசபைக்கு எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க நாங்கள் தயார் என்று தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கோவையில் நடைபயண இயக்கத்தை அவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தற்போதைக்கு தேர்தல் தொடர்பாக எந்தக் கட்சியுடனும் நாங்கள் பேச்சுவார்த்தை மேற்கொள்ளவில்லை. கூட்டணி தொடர்பாகவும் ஆலோசிக்கவில்லை. மக்கள் பிரச்சினைகள் குறித்து மட்டுமே கவனம் செலுத்தி வருகிறோம்.
மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி வருகிறோம்.
திருப்பூர் எம்.எல்.ஏ கோவிந்தசாமி கட்சியை விட்டுப் போனதால் எங்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. அது பற்றி நாங்கள் கவலைப்படவும் இல்லை. தமிழகத்தின் மேற்குப் பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் போல வலுவாகவே உள்ளது.
எங்களது நடைபயண இயக்கம் செப்டம்பர் 4ம் தேதி பிரமாண்ட கூட்டத்துடன் நிறைவு பெறுகிறது. அந்தக் கூட்டத்தில் சீதாரம் எச்சூரி பங்கேற்கிறார். செப்டம்பர் 5ம் தேதி கட்சியின் கூட்டம் திருச்சியில் நடைபெறும் என்றார்.