தமிழக சட்ட மேலவைத் தேர்தல்-அரசியல் கட்சிகளுக்கு ஒரு வாரம் அவகாசம்
சென்னை: தமிழக சட்ட மேலவைக்கான தேர்தல் குறித்து ஒரு வாரத்திற்குள் கருத்து தெரிவிக்குமாறு தமிழக அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவை அமையவுள்ளது. இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கொடுத்ததைத் தொடர்ந்து அதற்கான தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.
முதல் கட்டமாக 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தொகுதிகளை தீர்மானித்துள்ளது. மேலவையில் மொத்தம் 78 தொகுதிகள் இடம்பெறுகின்றன. இதில் எம்.எல்.ஏக்கள் மூலம் 26 பேர் தேர்வு செய்யப்படுவர். உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் மூலம் 26 பேர் உறுப்பினர்களாவர். ஆசிரியர்-பட்டதாரி தொகுதிகள் 7 ஆகும். ஆளுநர் 12 பேரை நியமிப்பார்.
தமிழகத்தில் மொத்தம் 32 மாவட்டங்கள் உள்ளன. இவற்றில் பெரம்பலூர்-கடலூர், கரூர்-நாமக்கல், நீலகிரி-கோவை, தேனி-திண்டுக்கல், அரியலூர்-திருச்சி, திருவாரூர்-நாகை, ராமநாதபுரம்-சிவகங்கை ஆகிய மாவட்டங்கள் ஒன்றாக சேர்க்கப்பட்டு 7 தொகுதிகளாக கருதப்படும். மற்ற மாவட்டங்கள் 25 தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
வரைவுப் பட்டியலை தயார் செய்துள்ள தேர்தல் ஆணையம் இதுதொடர்பான அரசியல் கட்சிகளின் கருத்தை அறிய நேற்று கூட்டம் ஒன்றைக் கூட்டியிருந்தது.
இதில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான திமுக, அதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பாஜக, பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் வினோத் சுர்ஸி, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் உள்ளிட்டோர் தேர்தல் ஆணையம் சார்பில் பங்கேற்றனர்.
திமுக, காங்கிரஸ் சார்பில் பங்கேற்றவர்கள் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். அதேசமயம், அதிமுக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், பாஜக உள்ளிட்டவை தேர்தலை நடத்துவதில் அவசரம் காட்டக் கூடாது என்று வலியுறுத்தினர்.
தேர்தலில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியது.
அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைகளையும் கேட்டுக் கொண்ட பின்னர் இதுகுறித்து ஒரு வாரத்திற்குள் எழுத்துப் பூர்வமாக அரசியல் கட்சியினர் தங்களது கருத்தினைத் தெரிவிக்க வேண்டும் என தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் உத்தரவிட்டார்.