தூத்துக்குடி பெண் விஞ்ஞானிக்கு ரூ.5.25 லட்சம் நிதியுதவி
தூத்துக்குடி: வாழைத்தண்டில் இருந்து பஞ்சு பிரித்தெடுக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்த தூத்துக்குடி பெண் விஞ்ஞானி லலிதா முருகனுக்கு அதை நவீனப்படுத்த ரூ.5.25 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி பிரையன்ட் நகரை சேர்ந்தவர் லலிதா முருகன். விஞ்ஞானியான இவர் கடந்த 2007ம் ஆண்டு வாழைத்தண்டில் இருந்து பஞ்சினை தனியாக பிரித்தெடுக்க ஒரு இயந்திரத்தை வடிவமைத்தார்.
இந்த இயந்திரம் மூலம் பஞ்சு நீக்கப்பட்ட வாழை தண்டை பயன்படுத்தி பல விதமான உணவுகளை எளிதாக தயாரிக்கலாம். மேலும் லலிதா முருகன் இதை பயன்படுத்தி வாழைத்தண்டு மி்ட்டாய், சாக்லெட் போன்ற உணவு பொருட்களை உற்பத்தி செய்தார்.
இந்த சாக்லெட் 48 வகை மருத்துவ குணம் கொண்டது. இவரது கண்டுபிடிப்புக்காக கடந்த 2007ம் ஆண்டு அப்போதைய ஜானதிபதி அப்துல் கலாமிடம் இருந்து விருதும், பாராட்டு சான்றும் பெற்றுள்ளார்.
இந்த கண்டுபிடிப்பை இந்திய அறிவியல் துறை அமைச்சகமும், நபார்டு வங்கியும் அங்கீகரித்துள்ளன. இந்த இயந்திரத்தை நவீனப்படுத்த நபார்டு வங்கி ரூ.2.50 லட்சமும், டெல்லி அறிவியல் கழகம் மற்றும் தொழில் ஆராய்ச்சி மையம் ரூ.2.75 லட்சமும் நிதியுதவி அளித்துள்ளது.
இந்த நிதியை கொண்டு லலிதா முருகன் தான் கண்டுபிடித்துள்ள இயந்திரத்தை நவீனப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். விஞ்ஞானி லலிதாவின் கணவர் முருகனும் ஒரு கண்டுபிடிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.