தர்மம் எழுச்சி பெறட்டும்: ஜெ கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: எப்போதெல்லாம் தர்மம் அழிந்து போய் அதர்மம் எழுச்சி பெறுகிறதோ அப்போதெல்லாம் தோன்றுபவர் பகவான் கிருஷ்ணர் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கிருஷ்ண ஜெயந்தியை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கொடநாட்டில் இருந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பகவத் கீதையை பாரினிற்கு வழங்கிய பகவான் கிருஷ்ணர் அவதரித்த திரு நாளாம் கிருஷ்ண ஜெயந்தி திருநாளை கொண்டாடும் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்களை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நல்லோரை காத்து, தீயோரை அழித்து, அறத்தை நிலை நிறுத்துபவர் பகவான் கிருஷ்ணர். எப்போதெல்லாம் தர்மம் அழிந்து போய் அதர்மம் எழுச்சி பெறுகிறதோ அப்போதெல்லாம் தோன்றுபவர் பகவான் கிருஷ்ணர்.

மனிதன் சர்வ துக்கங்களில் இருந்தும் விடுபடும் வழியை பகவத் கீதை மூலம் நமக்கு உணர்த்தியவர் பகவான் கிருஷ்ணர். பகவான் கிருஷ்ணர் அவதரித்த இந்த நன்னாளில் அறம் தழைத்து, தர்மம் எழுச்சி பெற்று துன்பங்கள் அகன்று, நீங்காத செல்வம் தமிழர் வாழ்வில் நிறையட்டும் என மனதார வாழ்த்துகிறேன்.

எனதருமை தமிழக மக்கள் அனைவருக்கும் என் இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் உரித்தாகுக என்று கூறியுள்ளார்.

அதிமுக நிர்வாகிகள் மாற்றம்:

அவர் வெளியிட்டுள்ள இன்னொரு அறிக்கையில், அதிமுக விவசாயப் பிரிவு பொறுப்பில் இருக்கும் சோழன் பழனிசாமி, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர் பொறுப்பில் இருக்கும் சரவணபெருமாள், இலக்கிய அணி இணைச் செயலாளர் பொறுப்பில் உள்ள கலைராஜன் எம்.எல்.ஏ. ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

இதுபோல், தென் சென்னை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் பொறுப்பில் இருக்கும் ராஜலட்சுமி, கோவை மாநகர் மாவட்ட இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் விஷ்ணு பிரபு ஆகியோரும் அவரவர் வகித்து வரும் பொறுப்பு களில் இருந்து இன்று முதல் விடுவிக்கப்படுகிறார்கள்.

அதிமுக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை இணை செயலாளர் பொறுப்பில் சென்னை தியாகராயநகர் எம்.எல்.ஏ. கலைராஜன், தூத்துக்குடி சவணபெருமாள், தியாகராயநகர் ராஜலட்சுமி, ஆகியோர் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

இளைஞர், இளம் பெண்கள் பாசறை துணை செயலாளர் பொறுப்பில் கோவை விஷ்ணு பிரபு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.

சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் உமாதேவன், சிவகங்கை மாவட்ட விவசாயப் பிரிவு தலைவர் ஆத்தூர் பஞ்சவர்ணம் ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பில் சோழன் பழனிசாமி, சிவகங்கை மாவட்ட விவசாய பிரிவு தலைவர் பொறுப்பில் உமாதேவன், சிவகங்கை மாவட்ட விவசாய பிரிவு துணைத் தலைவர் பொறுப்பில் ஆத்தூர் பஞ்சவர்ணம் ஆகியோரும் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

திருவாரூர் நாகப்பட்டினம் மாவட்ட அ.தி.மு.க. பொறுப்பாளராக செயல்பட்டு வந்த சோழன் பழனிசாமி இன்று முதல் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

அ.தி.மு.க. விவசாயப் பிரிவு தலைவர் துரை கோவிந்தராஜன், இன்று முதல் தஞ்சாவூர் தெற்கு, தஞ்சாவூர் வடக்கு, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

கட்சி தொண்டர்கள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.

சத்துணவு பணியாளர் மீதான நடவடிக்கை-கைவிட வேண்டும்:

ஜெயலலிதா வெளியிட்டுள்ள இன்னொரு அறிக்கையில், அரசின் தவறான கொள்கைகள் காரணமாக ஏறிக் கொண்டே இருக்கும் விலைவாசி உயர்வினை சமாளிக்க முடியாமல், காலமுறை ஊதிய விகிதம், ஓய்வூதியம், பதவி உயர்வு உட்பட தங்களுடைய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று சத்துணவு ஊழியர்கள் 2009 ம் ஆண்டு முதல் வலியுறுத்தி வருகின்றனர்.

இந் நிலையில், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 30.8.2010 அன்று கோட்டை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று சத்துணவு ஊழியர் சங்கம் அறிவித்தது.

இதனையடுத்து, பெண்கள் உட்பட அனைத்து சத்துணவு ஊழியர்களும் இரவு நேரங்களில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இதனையும் மீறி, 30 8 2010 அன்று சத்துணவு ஊழியர்கள் கோட்டையை முற்றுகையிட்டு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை, மெரினா கடற்கரை ஆகிய இடங்களிலும் மறியல் போராட்டம் நடைபெற்று இருக்கிறது. முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கடுமையாக தாக்கியுள்ளனர். சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பழனிச்சாமி கடும் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார்.

போராட்டத்தை வாழ்த்த சென்ற அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளும், நூற்றுக்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்களும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.

சத்துணவு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் குறித்து சங்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் அடக்குமுறையை ஏவிவிட்டிருக்கும் முதல்வர் கருணாநிதிக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு சங்க மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மீது எடுக்கப்பட்ட பணி நீக்கம் மற்றும் இதர ஒழுங்கு நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+