தமிழகத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்காக காத்திருக்கும் 12 பேர்

சென்னையில் 10 வயது சிறுவன் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் மோகன், கோபி ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பி இருக்கிறார்கள்.
மதுரையில் 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் செல்வம் என்பவருக்கு மதுரை மகளிர் நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி உள்ளது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளார். இந்த மனு நிலுவையில் உள்ளது.
நாகர்கோவிலை சேர்ந்த அய்யாவு என்பவர் கோர்ட்டில் படுகொலை செய்யப்பட்டார். இதில் குமரி மாவட்டத்தை சேர்ந்த ராதா கிருஷ்ணன், சேக்மீரான், செல்வம் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் திருச்சி சிறையில் உள்ளனர். குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பி இருக்கிறார்கள்.
இந்த வரிசையில் தற்போது தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் சிக்கிய அதிமுகவைச் சேர்ந்த நெடு என்கிற நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோர் சேர்ந்துள்ளனர். இவர்களுக்கான மரண தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை 12 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 8 பேர் கருணை மனு தாக்கல் செய்துல்ளனர். ஒருவர் கீழ்க்கோர்ட்டில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்துள்ளார். தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தண்டனை பெற்றவர்கள் விரைவில் கருணை மனு தாக்கல் செய்வார்கள் என்று தெரிகிறது.
தமிழகத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் நளினிக்கு அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அதேபோல சமீபத்தில், கோவையைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின் மரண தண்டனையும் குடியரசுத் தலைவரால் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications