மோடிக்கு எதிரான கூடுதல் டிஜிபி மீதான எப்ஐஆர்-கோர்ட் ரத்து
அகமதாபாத்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிரான கூடுதல் டிஜிபி மீது குஜராத் அரசு பதிவு செய்த வழக்கை, குஜராத் உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
சோராபுதீன் மற்றும் அவரது மனைவி கெளசர் பீ ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சிபிஐ விசாரணைக்குத் தேவையான பல முக்கியத் தகவல்களை அந்த மாநில கூடுதல் போலீஸ் டிஜிபி குல்தீப் சர்மா அளித்தார்.
இதனால் அவர் மீது குஜராத் அரசு காட்டமடைந்திருந்தது. இந்த நிலையில், கடந்த 1984-ம் ஆண்டு நடந்த ஒரு என்கவுண்ட்டர் வழக்கில் குல்தீப் சர்மா மீது, குஜராத் மாநில சி.ஐ.டி. போலீசார் கடந்த மாதம் எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர். இதை எதிர்த்து, அகமதாபாத் உயர்நீதிமன்றத்தில் குல்தீப் வழக்கு தொடர்ந்தார்.
அதில், சோராபுதீன் போலி என்கவுண்ட்டர் வழக்கில் சில முக்கிய தகவல்களை சி.பி.ஐ.யிடம் நான் அளித்ததால் முதல்வர் நரேந்திர மோடி மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பழி வாங்கும் நடவடிக்கையாக என் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர். அதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்றுகோரியிருந்தார்.
இதை விசாரித்த நீதிபதி சுக்லா, எப்ஐஆர் ரத்து செய்யப்படுவதாக உத்தரவிட்டார். அப்போது இதை எதிர்த்து மேல் முறையீடு செய்ய அரசு முடிவு செய்திருப்பதால் இந்த உத்தரவை நிறுத்தி வைக்குமாறு கோரினார் குஜராத் மாநில அட்வகேட் ஜெனரல். ஆனால் அதை நீதிபதி நிராகரித்து விட்டார்.












Click it and Unblock the Notifications