மதானி கைது செய்த போலீஸ் அதிகாரி செப் 13ல் ஆஜராக கொல்லம் கோர்ட் உத்தரவு
கொல்லம்: மதானியை கைது செய்த பெங்களூர் துணை போலீஸ் கமிஷனர் ஓம்காரய்யா வரும் 13-ம் தேதி நேரில் ஆஜாராக வேண்டும் என்று கொல்லம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெங்களூர் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மதானி 31வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இதையடுத்து கடந்த மாதம் 17-ம் தேதி பெங்களூர் துணை போலீஸ் கமிஷனர் ஓம்காரய்யா தலைமையிலான போலீசார் மதானியை கைது செய்து பெங்களூர் கொண்டு சென்றனர்.
இதனிடையே மதானியின் சகோதரர் அப்துல் சலாம் கொல்லம் குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் மதானி கைது விவகாரத்தில் பெங்களூர் போலீசார் சட்டத்தை மீறியுள்ளதாகவும், கிரிமினல் சட்டப்படி ஒருவரை கைது செய்யும்போது 30 கி.மீ.-க்கு மேல் ஒருவரை கொண்டு செல்ல வேண்டுமேன்றால் அருகில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அனுமதி பெற வேண்டும். ஆனால் பெங்களூர் போலீசார் இதனை மீறி மதானியை பெங்களூர் கொண்டு சென்றுள்ளனர். எனவே, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த கொல்லம் நீதிமன்றம் பெங்களூர் துணை போலீஸ் கமிஷனர் ஓம்காரய்யா வரும் 13-ம் தேதி நேரில் ஆஜாராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications