போலீஸ் வாகனங்களில் டீசல் திருடிய போலீஸ்காரர் கூட்டாளியுடன் கைது
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே பாலராமபுரத்தில் உள்ள தனியார் பட்டறைக்கு ஆயுதப்படையைச் சேர்ந்த வேன்கள் அடிக்கடி வந்து செல்வதாகவும், அந்த வேன்களில் இருந்த டீசல் திருடப்படுவதாகவும் திருவனந்தபுரம் நகர போலீஸ் கமிஷனர் அஜித் குமாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த குறிப்பிட்ட பட்டறையை ரகசியமாக கண்காணிக்குமாறு போலீசாருக்கு கமிஷனர் உத்தரவு பிறப்பித்தார். போலீசாரும் அந்த பட்டறையை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் புளூங்குடி ஆயுதப்படை முகாமைச் சேர்ந்த ஒரு வேன் அங்கு வந்தது. அப்போது ஆயுதப்படை முகாமில் போலீசாக பணிபுரியும் வேன் டிரைவர் பால், பட்டறை உரிமையாளர் அபூபக்கர் ஆகியோர் வேனில் இருந்து டீசலை திருடிக் கொண்டிருந்தனர்.
உடனே அங்கு சென்ற போலீசார் டிரைவர் பால் மற்றும் அபூபக்கரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 30 லிட்டர் டீசல் கைப்பற்றப்பட்டது. கடந்த இரண்டு வருடங்களாக இருவரும் ஆயுதப்படைக்கு சொந்தமான வேன்களில் டீசல் திருடியது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.