அமெரிக்க விமானத்தில் வந்த இருவர் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தில் கைது
ஆம்ஸ்டர்டாம்: யுனைட்டெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த இருவரை தீவிரவாதிகளாக இருக்குமோ என்ற அச்சத்தில் நெதர்லாந்து போலீஸார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் இருந்து நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிற்கு நேற்று முன்தினம் வந்த யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் சந்தேகத்திறகுரிய 2 பேர் பயணம் செய்வதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் நெதர்லாந்துக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து அந்த விமானத்தில் வந்திறங்கிய எல்லா பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் நெதர்லாந்து போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர்.
அப்போது ஒருவரது பையில் ஒரு செல்போன், மருந்து பாட்டில், கத்திகள் மற்றும் கை கடிகாரங்கள் இருந்தது. மற்றொரு நபரின் பையில் துணிகளுக்கு இடையே 4 செல்போன்கள், மது பாட்டில், கைக்கடிகாரங்கள், பாக்ஸ் கட்டர், 3 பெரிய கத்திகள் ஆகியவை இருந்தன.
இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்களது பெயர் அகமது மொகமத் நசீர் அல்ஷூபி, ஹெஷாம் அல்முரிசி என தெரியவந்தது. இவர்கள் இருவரும் ஏமன் நாட்டை சேர்ந்தவர்கள்.
இவர்கள் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள். இவர்கள் வைத்திருந்த ஆயுதங்கள் ஆபத்தை விளைவிக்க கூடியவை என்பதால் இவர்கள் தீவிரவாதிகளாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதன் பிறகு இவர்களை போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்திய சோதனையில் வெடிபொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. எனினும், தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இவர்களை இன்னும் சில நாட்களில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். இல்லையென்றால் விடுதலை செய்யப்படுவார்கள் என்று நெதர்லாந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications