''என் ஆயுள் அடங்கும் கடைசி நொடியில் விழியோரம் ஒரு சொட்டு நீர் உருண்டு வரும்...''

Subscribe to Oneindia Tamil

Vasanthi Stanley
சென்னை: நான் தோள் வலி உடையவன் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

கருணாநிதியின் 87 வயதைக் குறிக்கும் வகையில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தேசிய மற்றும் தமிழகத் தலைவர்கள் 87 பேர் அவரைப் பற்றி தெரிவித்த கருத்துகள் 'கலைஞர் 87' என்ற பெயரில் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது.

திமுக எம்பி வசந்தி ஸ்டான்லி தொகுத்துள்ள அந்த நூல் வெளியீட்டு விழா சென்னை மியூசிக் அகாடமியில் நடந்தது. நிதியமைச்சர் பேராசிரியர் அன்பழகன் நூலை வெளியிட முதல் பிரதியை புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் கருணாநிதி பேசியதாவது:

இந்தத் தொகுப்பு நூலில் வசந்தி ஸ்டான்லி எழுதிய கட்டுரையில் கடைசி வரிகள் என்னுடைய உள்ளத்தில் எத்தனையோ உணர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றது. "அப்பா! என் ஆயுள் அடங்கும் கடைசி நொடியில் விழியோரம் ஒரு சொட்டு நீர் உருண்டு வரும். அது உங்கள் பாதத்தை நனைத்தால் நன்றிக் கடனைத் தீர்த்த பாக்கியத்தை நான் அடைவேன் அப்பா!'' என்று வசந்தி ஸ்டான்லி எழுதியிருக்கிறார்.

இது என்னுடைய உள்ளத்தை உருக்குவதாக இருந்தாலுங்கூட, இப்படி ஒன்று நடக்கக் கூடாது என்று நான் விரும்புகின்றேன். ஆயுள் அடங்குகின்ற கடைசி நொடியில் விழியோரம் சொட்டு நீர் உருண்டு வரும், அது உங்கள் பாதத்தை நனைத்தால் நன்றிக் கடனைத் தீர்த்த பாக்கியத்தை அடைவேன் அப்பா என்று எழுதியது போல நடக்கக் கூடாது என்பதுதான் என்னுடைய எண்ணம்.

இந்த இயக்கத்தில் யார் என்னை விட்டுப் பிரிந்தாலும்- இந்த இயக்கத்தினுடைய தொண்டினைத் தொடராமல் உயிர் விட்டாலும்- அது நடக்கக் கூடாது என்று கருதுகிறவன் நான், எனவே தான் வசந்தி ஸ்டான்லி போன்ற கழகத்தினுடைய கருவூலம் போன்றவர்கள், கழகத்தினுடைய ஆற்றல் மிக்க தொண்டுள்ளம் படைத்தவர்கள் பல காலம் இருந்து எந்தக் கொள்கைக்காக தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா வழி நின்று நாங்களும் பாடுபட்டு வருகிறோமோ, அந்தக் கொள்கைகளை வெற்றிகரமாக நிறைவேற்றித் தீருவோம் என்று ஒரு சூளுரை மேற்கொண்டு இந்தக் கட்டுரை முடிக்கப்பட்டிருந்தால் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.

அதை விட்டு விட்டு என்னுடைய விழியோரம் ஆயுள் அடங்கும் நேரத்திலே உருண்டோடுகின்ற ஒரு சொட்டு நீர், உங்களுடைய காலடியை நனைத்தால், அதுவே எனக்குப் பாக்கியம் என்று எழுதியிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது, நான் விரும்பாதது, யாரும் இதை ரசிக்க முடியாதது.

ஏனென்றால் வசந்தியைப் போன்ற, கொள்கை உறுதி படைத்தவர்கள் இந்த இயக்கத்திற்கு நிரம்பத் தேவை. எனவே தான் உங்களையெல்லாம் இழக்க நான் தயாராக இல்லை.

உங்களுடைய கண்களிலே இருந்து உருண்டு வருவது கண்ணீர் துளியாக இருந்தாலும், ஏன் அது பன்னீர் துளியாக இருந்தாலும் கூட நான் அதை ஏற்க மாட்டேன். ஏற்கத் தயாராக இருக்கிறேன் என்று சொல்லி, கண்ணீர் விடுங்கள் என்று சொல்லவும் மாட்டேன். கண்ணீரைத் துடைப்பது தான் கழகத்தின் நோக்கம்.

கண்ணீரை தமிழகத்திலே காணாத நிலையை உருவாக்குவது தான் கழக அரசின் குறிக்கோள். அப்படிப்பட்ட குறிக்கோளும், நோக்கமும் கொண்ட அரசை நடத்துகின்ற ஒரு தலைவனைப் பார்த்து, என்னுடைய கண்ணீர் உன் பாதத்தை நனைக்கட்டும் என்று சொன்னால், அந்தச் சோகச் சித்திரத்தை- எழுத்து வண்மைக்காகப் பாராட்டலாமே தவிர, உண்மையிலேயே நடக்காமல், நடக்கக் கூடாது என்ற அந்த உறுதியைத் தான் நான் மேற்கொள்ள விரும்புகிறேன்.

ஒரு அருமையான புத்தகம். என்னைப் பற்றி 87 பேர் எழுதியிருக்கிறார்கள், கருத்து அறிவித்திருக்கிறார்கள். என்னுடைய நெருங்கிய நண்பர்கள், நிரந்தரப் பகைவர்கள் என்போர் எல்லாம் கூட பாராட்டியிருக்கிறார்கள்.

எனவே இங்கே தம்பி வைரமுத்து குறிப்பிட்டதைப் போல, பீட்டர் அல்போன்ஸ் எடுத்துக் காட்டியதைப் போல இது எதிர்காலத்திற்குப் பயன்படக் கூடிய ஒரு ஆவணம். அந்த ஆவணத்தைத் தயாரித்துக் கொடுத்த வகையில் வசந்தி ஸ்டான்லி அவர்களுக்கு நான் பெரிதும் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.

அவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து அங்கே தருகின்ற ஊதியத்தைப் பெற்று வாய்ப்பு வசதிகளைப் பயன்படுத்திக் கொண்டு தன்னுடைய வாழ்க்கையை நடத்தியிருக்கலாம். கழகத்திலே ஒரு சிறந்த சொற்பொழிவாளர் என்ற முறையில், வெளிiர்களுக்குச் சென்று ஒளி மிகுந்த பிரச்சாரங்களைச் செய்து இந்தக் கழகத்திற்கு வழிகாட்டியிருக்கலாம். மற்றவர்களுக்கெல்லாம் வழிகாட்டியாக இப்படியொரு புத்தகத்தை வெளியிட வேண்டும், அதை கழகத்தின் ஆவணமாக ஆக்க வேண்டும் என்று வசந்தி ஸ்டான்லிக்குத் தோன்றியிருக்கிறது என்றால், இது பாராட்டத்தக்க, போற்றத்தக்க, புகழத்தக்க ஒரு செயல் என்பதை நான் சொல்லாமல் இருக்க முடியாது.

ஒரே ஒரு குறை. இதனுடைய விலை 400 ரூபாய் என்று அச்சடிக்கப்பட்டிருக்கிறது. விலை என்னமோ அதிகம் தான். வசந்தியைக் கேட்டால் உங்களுக்கு ஏதப்பா விலை என்று கூடச் சொல்லக் கூடும். அதெல்லாம் வெறும் கவிதை நடை மொழிகள்.

எனக்குத் தரப்பட்ட தலைப்பு "ஏற்புரை'' - ஏற்புரை என்பது புத்தகத்திலே உள்ள வாசகங்களுக்குத் தானே தவிர, அட்டையிலே உள்ள விலைக்காக அல்ல.

ஒரு வேளை நாளைக்கே விலையைக் குறைவாகப் போட்டால், எதிர்க்கட்சிக்காரர்கள் சில பேர் சொல்லக் கூடும். புத்தகம் விற்கவில்லை, ஆகவே விலையை குறைத்து விட்டார்கள் என்ற ஏச்சுக்கும் பேச்சுக்கும் காது கொடுத்து நம்முடைய கடமைகளை மறந்து விடக் கூடியவர்கள் அல்ல.

யார் என்ன பேசினாலும், என்ன சொன்னாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல், உரிய விலை, நியாயமான விலை என்ன என்பதை எண்ணிப் பார்த்து அந்த வகையிலே இந்தப் புத்தகத்திற்கு விலையை நிர்ணயிப்பதற்கு அவர் மறு பரிசீலனை செய்ய வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

மறு பரிசீலனையை அரசாங்கமே செய்யும்போது- மறு பரிசீலனையை நாம் செய்யாமல் இருக்கத் தேவையில்லை, ஆகவே மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

நம்முடைய இயக்குநர் பாரதிராஜா உடல் நலிவோடு இங்கே வந்தேன் என்றார். ஏற்புரையாற்ற வந்திருக்கின்ற நானும், நேற்றையதினம் ராமச்சந்திரா மருத்துவமனையில் ஏறத்தாழ ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஒரு அறுவைச் சிகிச்சைக்கு எந்த ஆயத்தங்கள் உண்டோ, அவ்வளவு ஆயத்தங்களோடு நடைபெற்ற தோள் வலிக்கான ஊசி போடுகின்ற சிகிச்சையைச் செய்து கொண்டு தான்- பேராசிரியர் குறிப்பிட்டதைப் போல் ஒரு நாள் ஓய்வு எடுத்துக் கொண்டு இங்கே வந்திருக்கிறேன். கூடவே மருத்துவர் வந்திருக்கிறார்.

ராமச்சந்திரா மருத்துவமனையிலே இருக்கின்ற பெரிய டாக்டர், திறமையான டாக்டர், மிகுந்த நல்ல உள்ளம் படைத்தவர் டாக்டர் மார்த்தாண்டம், அவர் தான் எனக்கு சிகிச்சை செய்தார், சென்ற ஆண்டும் அவர் தான் சிகிச்சை செய்தார்.

அவர் சொன்னார்- ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் சென்று மூன்று மணி நேரம், நான்கு மணி நேரம் உட்கார்ந்திருக்கிறீர்களே, அதுவே உங்களுக்குப் பெரும் நலிவை விளைவிக்கும் என்று சொன்னார். நான் சொன்னேன்- நண்பர்கள் அழைக்கும்போது- கழகத் தோழர்கள் விரும்பும் போது மேடையில் வீற்றிருப்பவர்களின் பேச்சை பாதியிலே நிறுத்தி விட்டு நான் இறங்கி விட முடியாது என்று சொன்னேன்.

டாக்டர் சொன்னார்- ஏதோ கவியரங்கம் என்று போகிறீர்கள், உங்களுக்குத் தெரியாத கவிதைகளையா அவர்கள் பாடி விடப் போகிறார்கள், அதை கேட்டுக் கொண்டு மூன்று மணி நேரம் உட்கார்ந்திருக்கிறீர்களே, முறையா? என்று கேட்டார்.

நான் அவரிடம் சொன்னேன். நான் தெரிந்து கொள்ள வேண்டிய கவிதைகளையும் அவர்கள் பாடுகிறார்கள், நான் அதற்காகத் தான் போகிறேன், அவற்றை நான் மிகவும் ரசிக்கிறேன் என்று குறிப்பிட்டேன். ஆனால் கண்டிப்பாக இனிமேல் எந்த நிகழ்ச்சியானாலும், போய்க் கலந்து கொண்டு, நீங்கள் ஆற்ற வேண்டிய உரையை ஆற்றி விட்டு, அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு திரும்பி விடுங்கள் என்றெல்லாம் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

அதற்காகவே ஒரு டாக்டர் என்னுடன் வந்திருக்கிறார். அவரிடமும் சொல்லி விட்டு இன்று நான் இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டிருக்கிறேன். இது ஒன்றும் பிரமாதமான நோயல்ல. தோள் வலி தான்.

தோள் வலிக்கு இரண்டு பொருள் உண்டு. தோளிலே வலிப்பது ஒன்று. தோள் வலி மிக்கவன் என்பது ஒன்று. தோள் வலி உடையவன் என்றால், அவன் வீரன். அது போல எனக்கு தோள் வலி. இப்படி பொருள் கொள்ள வேண்டுமென்று என் எதிர்வரிசை நண்பர்களைக் கேட்டுக் கொண்டு யாரும் கவலைப்படாதீர்கள், தோள் வலி மிகுந்திருக்கிறது, தோள் வலி மிகுந்த காரணத்தால் தான் இவ்வளவு அல்லல்கள், ஆபத்துகள், சோதனைகள் அனைத்தையும் தாங்குகின்ற அந்த வலிமை மருந்தாக நீங்கள் தருகின்ற அன்பாக எனக்குப் பயன்படுகின்றது.

இந்த அன்பு என்கின்ற மருந்து இருக்கின்ற வரையில், இந்தப் பாசம் என்கின்ற மருந்து இருக்கின்ற வரையில், எந்த வலியும் என்னை ஒன்றும் செய்ய முடியாது. அப்படியென்றால் இன்னும் ஒரு மணி நேரம் பேசு என்று சொல்லி விடாதீர்கள். ஓய்வெடுத்துக் கொள்ள அனுமதி கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டு வசந்தி ஸ்டான்லி அப்பாவின் பேச்சை உடனே கேட்டு, 400 ரூபாய் விலையை 300 ரூபாய் என்று நிர்ணயித்து வழங்க முன் வந்திருக்கிறார்.

அதிலே கூட "அடக்க விலை'' என்று சொல்லியிருக்கிறார். பரவாயில்லை 300 ரூபாய்க்கு இந்தப் புத்தகம் விற்பனையாவதில் எனக்கு மகிழ்ச்சி தான்.

இதிலே எழுதியுள்ள நண்பர்கள் என்னைப் பாராட்டியும், என்னிடத்திலே அன்பு கொண்டும் பாசம் கொண்டும் பழகிக் கொண்டிருப்பவர்கள். அத்வானி போன்ற தலைவர்கள் எல்லாம் நாகரிகத்தோடு, அரசியல் நாகரிகத்தோடு எழுதியிருக்கிறார்கள் என்பதை அத்வானிக்கும் எனக்குமுள்ள கருத்து வேறுபாடு எவ்வளவு மூர்க்கமாக ஒருவரையொருவர் எதிர்த்தோம் என்பதையெல்லாம் மறந்து விட்டு, ஒருவரை எந்த வகையில் பாராட்ட வேண்டுமோ அந்த வகையில் பாராட்டுகின்ற அந்த அரசியல் நாகரிக நிலையை எடுத்த அத்வானி அவர்களுக்கும், அவரைப் போல் அதே நிலையை எடுத்து என்னைப் பாராட்டி இதிலே எழுதி உள்ளவர்களுக்கும் என்னுடைய தலைதாழ்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் கருணாநிதி.

கவிஞர் வைரமுத்து பேசுகையில், கருணாநிதியை பற்றி புத்தகத்தில் எழுதுவது யானையை வெற்றிலை பெட்டியில் அடைப்பது போன்றது. யானையை எப்படி வெற்றிலை பெட்டியில் அடைத்துவிட முடியாதோ, அதேபோல அவரை பற்றி ஒரு நூலில் எழுதிவிடமுடியாது.

கருணாநிதியை பற்றி இந்த நூலில் தினத்தந்தி' பத்திரிகை அதிபர் சிவந்தி ஆதித்தன் குறிப்பிட்டுள்ளார். அதில், சமீபத்தில் ஒரு திருமண வீட்டில் கருணாநிதியின் அருகில் இருக்கும் போது ஒரு பெரியவர் வந்து என்னை தெரிகிறதா என்று கருணாநிதியிடம் கேட்டார்.

பெரியவரை உற்று பார்த்த கருணாநிதி நீங்கள் 1947ல் திருத்துறைபூண்டியில் இருந்த காங்கிரஸ்காரர் தானே என்று கேட்டார். ஒரே ஒரு முறை தான் சந்தித்துள்ளார், அப்படி இருந்தும் 40 ஆண்டுகளுக்கு பிறகும் அடையாளம் கண்டுள்ளார். இதில் இருந்து அவரது ஞாபகதிறன் தெரிகிறது. என்று குறிப்பிட்டுள்ளார் என்றார் வைரமுத்து.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+