காமன்வெல்த் போட்டிகளின்போது தீவிரவாதிகள் தாக்கலாம்-பீதியைக் கிளப்பும் அமெரிக்கா
காமன்வெல்த் போட்டிகள் அக்டோபர் 3ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரை டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் 71 நாடுகளிலிருந்து கிட்டத்தட்ட 10 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகள்டெல்லியில் வேகம் பிடித்துள்ளன.
டெல்லியில் மொத்தம் 13 ஸ்டேடியங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான கட்டுமானப் பணிகள் இன்னும் முடிந்தபாடில்லை. இருந்தாலும் உரியகாலத்தில் அனைத்தும் தயாராகி விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காமன்வெல்த் போட்டியின்போது தீவிரவாதத் தாக்குதல் நடைபெறலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஏற்கனவே இதுபோன்ற எச்சரிக்கையை அது வெளியிட்டிருந்தது. இப்போது மீண்டும் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து அது வெளியிட்டுள்ள அட்வைசரியில்,
டெல்லியில் அக்டோபர் மாதம் காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும். எனவே இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் அமெரிக்கர்கள் உஷாராக இருக்கவும்.
காமன்வெல்த் போட்டிகள் நடக்கும் போது தீவிரவாதிகள் தொடர்பான தகவல்கள் உடனுக்குடன் தெரிவிக்கப்படும். அதற்கு ஏற்ப டெல்லியில் உள்ள அமெரிக்கர்கள் நடந்து கொள்ள வேண்டும்.
காமன் வெல்த் போட்டி நடக்கும் நாட்களில் தாக்குதல் நடத்தப்படும் என்று உறுதியான குறிப்பிட்ட அச்சுறுத்தல் எதுவும் இல்லை. உலகம் முழுக்க அமெரிக்கர்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்படுவதால் இந்த முன் எச்சரிக்கை வெளியிடப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா இரண்டுமுறைஎச்சரித்துள்ளதால் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லி முழுவதும் நான்கு அடுக்கு பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பணிகளில் ராணுவ வீரர்களை ஈடுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் 13 இடங்களும் வரும் 7-ந் தேதிக்குள் போலீஸ் வசம் ஒப்படைக்கப்படும். அதன் பிறகு பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தையும் போலீசாரும், ராணுவத்தினரும் ஒருங்கிணைந்து செய்து முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
தீவிரவாதிகள் அணு ஆயுதம், ரசாயன தாக்குதல், கதிர் வீச்சு தாக்குதல் உள்பட எத்தகைய தாக்குதலில் ஈடுபட்டாலும் முறியடிக்க ராணுவத்தினர் ஏற்பாடு செய்து வருகிறார்கள். ஸ்டேடியம் முழுவதும் கண் காணிப்பு காமிராக்கள், மெட்டல் டிடெக்டர்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.
விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதற்காக 45 நாட்கள் கால அவகாசம் எடுத்துக் கொள்ள முன்பு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஸ்டேடியம் கட்டுமானப்பணிகள் முடிவடைவதில் தாமதம் ஏற்பட்டதால் தற்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய ஒரு வார கால அவகாசமே கிடைத்துள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று டெல்லியில் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.