வீரவநல்லூரில் பச்சிளம் குழந்தை ரோட்டில் வீச்சு: சரணாலயக் குழுவிடம் ஒப்படைப்பு
சேரன்மகாதேவி: வீரவநல்லூரை அடுத்துள்ள வெள்ளங்குழி வி.ஏ.ஓ. அலுவலகம் அருகே நேற்று காலை பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை துணியில் சுற்றப்பட்டு கிடந்தது.
இதை அந்த வழியாக வந்த பொதுமக்கள் பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். வீரவநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையை மீட்டு விசாரணை நடத்தினர். பின்னர் சமூக நலத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் குழந்தையை நெல்லையில் உள்ள சரணாலயத்தில் ஒப்படைக்க முடிவு செய்து அவர்களுக்கு தகவல் அளித்தனர்.
சரணாலய இயக்குனர் மோட்சராஜன் தலைமையில் ஒரு குழுவினர் குழந்தையை எடுத்துச் செல்ல வந்தனர். அப்போது அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்பகுதியைச் சேர்ந்த குழந்தையில்லாத நபர் ஒருவர் தானே குழந்தையை வளர்ப்பதாகக் கூறினார்.
நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு குழந்தையை நாங்களே வளர்ப்போம் என்று கூறியதால் பிரச்சனை ஏற்பட்டது. எனவே போலீசார் நெல்லை எஸ்.பி. ஆஸ்ரா கார்க்கிக்கு தகவல் தெரிவித்தனர். இறுதியில் எஸ்பி உத்தரவின்பேரில் போலீசார் குழந்தையை மீட்டு சரணாலயக் குழுவினரிடம் ஒப்படைத்தனர்.
வறுமை காரணமாக குழந்தை வீசப்பட்டதா அல்லது தகாத உறவால் பெற்ற தாயே குழந்தையை தெருவில் வீசினாரா என்பது குறித்து வீரவநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications