வரி ஏய்ப்பு செய்பவர்கள் பற்றி வருமான வரித்துறை அதிகாரிகளுடன் பிரணாப் ஆலோசனை
மும்பை: மும்பை வந்த மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வருமான வரித்துறை அதிகாரிகளை சந்தித்து பேசினார். நாட்டில் உரிய வரியைச் செலுத்தாமல் ஏய்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது பற்றி கலந்தாலோசித்தார்.
இதில் மும்பை வருமான வரித் துறை அதிகாரிகள், டெல்லியில் இருந்து வந்த நிதி அமைச்சக அதிகாரிகள் மற்றும் மத்திய நேரடி வரித்துறை அதிகாரிகள், வருவாய் புலனாய்வு அதிகாரிகள், சுங்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) வழக்கு, ஸ்டட் ஃபார்ம் நிறுவனத்தின் உரிமையாளர் ஹசன் அலி கானுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு, பிசிசிஐ சார்ந்த வரி ஏய்ப்பு வழக்கு போன்றவை பற்றி விவாதிக்கப்பட்டது.
வரியைச் செலுத்தாமல் அரசை ஏமாற்றுபவர்களைக் கண்டுபிடித்து தக்க தண்டனை அளிக்க வேண்டும் என்று பிரணாப் தெரிவித்தார்.
வருமான வரி மூலம் இந்திய அரசிற்கு கிடைக்கும் வருவாயில் மும்பையின் பங்கு மட்டும் 36 சதவிகிதம். இந்த சந்திப்பிற்கு பிறகு அவர் இள நிலை வருமான வரித்துறை அதிகாரிகளையும் சந்தித்தார்.
அன்மையில் தான் வரி ஏய்ப்பு செய்பவர்கள் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 20 சதவிகிதம் சன்மானம் அளிக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.