லஞ்சம் வாங்குவதைத் தடுத்த பெண் எஸ்.பி. யைத் தாக்கி 1.5 கிலோமீட்டர் இழுத்துச் சென்ற ஏட்டுகள்
பரேலி: உ.பி. மாநிலம் பரேலியில், பெண் எஸ்.பி. கல்பனா சக்சேனா என்பவர் தனக்கு கீழ் பணி புரிபவர்களால் தாக்கப்பட்டு, வாகனத்தில் தர தரவென இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போக்குவரத்தை சரிபார்க்கிறோம் என்ற பெயரில் பயணிகளை மிரட்டிப் பணம் வாங்குவதைத் தடுக்க முயன்றதால் அவருக்கு இந்த கோர நிலைமை. கிட்டத்தட்ட ஒன்றரை கிலோமீட்டர் தூரத்திற்கு அவர் வாகனத்தில் இழுத்துச் செல்லப்பட்டார்.
கல்பனா சாக்சேனா தற்போது மருத்துவமனையில் உடைந்த கையுடனும், தலையில் காயத்துடனும் சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்.
இந்த சம்பம் குறித்து அவர் கூறியதாவது,
ஜாட் ரெஜிமென்டுக்கு அருகில் போக்குவரத்து ஏட்டுகள் டிரக் ஓட்டுநர்களை மிரட்டி லஞ்சம் வங்குவதாக ராணுவ வீரர் ஒருவர் எனக்கு நேற்று மாலை தகவல் கொடுத்தார்.
இதைக் கேட்டவுடன் துப்பாக்கி சுடுபவர் மற்றும் கார் ஓட்டுநருடனும் தனியார் காரில் அந்த இடத்திற்கு விரைந்தேன். அவர்களை கையும் களவுமாக பிடிக்க நினைத்தேன். அங்கு சென்றபோது பணியில் இருந்த ஏட்டுகள் லஞ்சம் வாங்குவதைப் பார்த்தேன். என்னை அடையாளம் கண்டுகொண்ட அவர்கள் அந்த இடத்தில் இருந்து தப்பிக்க நினைத்ததோடு, அவர்கள் வாகனத்தை வைத்து என்னை நசுக்கப் பார்த்தார்கள்.
அவர்களை பிடிக்க ஓடியபோது வாகன ஓட்டுநரின் கழுத்தைப் பிடித்து விட்டேன். ஆனாலும் வண்டியை நிறுத்தாமல் நடுத் தெருவில் சுமார் 1 கிலோ மீட்டருக்கும் மேலாக என்னை இழுத்துக்கொண்டே சென்றனர். இறுதியில் என்னை தெருவில் தள்ளிவிட்டுச் சென்றுவிட்டனர் என்று அவர் கூறினார்.
குற்றவாளிகளில் ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும், மற்ற இருவரைத் தேடிக் கொண்டிருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் தெரிவித்ததாவது,
நேற்று மாலை சக்சேனாவிற்கு காவலர்கள் லஞ்சம் வாங்குவதாக வந்தத் தகவலை அடுத்து அவர் துப்பாக்கி சுடுபவர், கார் ஓட்டுநருடன் அந்த இடத்திற்குச் சென்றுள்ளார்.
அங்கிருந்த 3 ஏட்டுகளை விசாரித்ததில் தாங்கள் லஞ்சமே வாங்கவில்லை என்று மறுத்துள்ளனர். இதையடுத்து அவர் தனது உதவியாளரை விட்டு அந்த 3 பேரின் சட்டைப் பைகளை சோதனை செய்ய உத்தரவிட்டுள்ளார்.
வலையில் சிக்கிய அவர்கள் சக்சேனாவைத் தாக்கிவிட்டு அந்த இடத்தைவிட்டு ஓட முயன்றனர்.
அவர்கள் தப்பிக்கும் போது சக்சேனா ஒரு காவலரின் சட்டைக் காலரைப் பிடித்துள்ளார். அவர்கள் வண்டியை நிறுத்தாமல் சாக்சேனாவை இழுத்துக் கொணடே சென்றுள்ளனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக டி.ஐ.ஜி. என். கே. ஸ்ரீவாஸ்தவ் கூறியதாவது,
சம்பந்தப்பட்ட 3 பேரையும் தற்காலி பணிநீக்கம் செய்து, அவர்கள் மீது கன்ட் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் ஒருவரான மனோஜ் குமாரை கைது செய்துள்ளோம். மற்ற 2 பேரையும் தீவிரமாகத் தேடிக் கொண்டிருக்கிறோம் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications