தா.கி. கொலை குறித்த செய்தி-தினகரன் அலுவலகத்திற்கு நேர்ந்த கதியே ஏற்படும்-ஜெயா டிவிக்கு மிரட்டல்
இதுகுறித்து ஜெயா டிவி செய்திப் பிரிவு துணைத் தலைவர் கே.பி.சுனில் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இந்த மிரட்டல் குறித்து சுனில் கூறுகையில்,
வைகைப் புயல் பாலு, மதுரை என்ற பெயரில் ஒரு கடிதம் எங்களது அலுவலகத்திற்கு வந்துள்ளது. தமிழில் எழுதப்பட்டுள்ள அதில், தொடர்ந்து தா.கிருட்டிணன் கொலை வழக்கு தொடர்பாக செய்தி வெளியிட்டு வருகிறீர்கள். இதனால் எனது மனம் புண்பட்டுள்ளது.
உடனடியாக அந்த நிகழ்ச்சியை ஜெயா டிவி நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால், இந்த செய்தியை அளித்த நபரும், அவரது குடும்பத்தினரும் கொடூரமாகக் கொல்லப்படுவார்கள். அப்படி நடந்தால் அதற்கு ஜெயலலிதாதான் பொறுப்பேற்க வேண்டும்.
தொடர்ந்து தா.கி குறித்த செய்தியை ஒளிபரப்பி வந்தால் மதுரையில் தினகரன் நாளிதழுக்கு என்ன கதி ஏற்பட்டதோ அதே கதிதான் ஏற்படும். அதே விலையை ஜெயா டிவியும் தர நேரிடும்.
மதுரைக்கு அடுத்த மாதம் வரும் தனது முடிவை ஜெயலலிதா வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என கூறியுள்ளதாக சுனில் தெரிவித்தார்.
இதுகுறித்து டிஜிபிக்கும் புகார் மனுவை அனுப்பியுள்ள ஜெயா டிவி நிர்வாகம், குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கும், ஜெயா டிவி அலுவலகத்திற்கும் போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.
2வது மிரட்டல்:
ஆகஸ்ட் 28ம் தேதியும் இதேபோல ஒரு மிரட்டல் கடிதம் ஜெயா டிவி அலுவலகத்திற்கு வந்தது. மதுரை மாவட்டம் கள்ளந்திரியிலிருந்து அனுப்பப்பட்டதாக கூறப்படும் அக்கடிதத்தில், மதுரைக்கு ஜெயலலிதா வரக் கூடாது. அண்ணனைப் பகைத்துக் கொள்ளக் கூடாது. மீறி வந்தால் கொடூரமாக குண்டு வைத்துக் கொல்லப்படுவார் ஜெயலலிதா என மிரட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில் வைகைப் புயல் பாலு என்ற பெயரில் மீண்டும் ஜெயா டிவி அலுவலகத்திற்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.