புதிய பதநீர் அறிமுகம-3000 பனைத் தொழிலாளர்களுக்கு பயிற்சி-கருணாநிதி அறிவிப்பு
சென்னை: 3000 தொழிலாளர்களுக்கு பனை மரம் ஏறுவற்கான நவீன கருவிகளுடன் கூடிய பயிற்சி மற்றும் டெட்ரா பேக் பதநீர் ஆகியவற்றை முதல்வர் கருணாநிதி அறிமுகப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பனைமரம் ஏறி பதநீர் இறக்கும் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர் எண்ணிக்கை குறைந்து வருவதால், இத்தொழில் வளர்ச்சியைக் கருதியும், இத்தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுடைய குடும்பங்களின் நலன் கருதியும் பனைமரங்கள் மிகுந்துள்ள பகுதிகளில் கோவையிலுள்ள வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உதவியோடு நவீன தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி எளிதாகவும், விரைவாகவும், பாதுகாப்பான முறையிலும் பனைமரம் ஏறி தொழில் செய்திட 3 ஆயிரம் தொழிலாளர்களுக்கு இலவசமாகப் பயிற்சிகள் அளிக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி நேற்று அறிவித்துள்ளார்.
பதநீரில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து போன்றவைகளும், வைட்டமின்களும் அடங்கியுள்ளதால் இயற்கையான ஊட்டச்சத்து நிறைந்த உணவாகக் கருதப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த பதநீர் தற்பொழுது பாலிதீன் உறையில் அடைத்து காலை முதல் மாலை வரை விற்பனை செய்யப்படுகிறது. அதன்பின், பாதுகாத்து வைக்க முடியாமல் பதநீர் வீணாகிறது.
இயற்கையான சத்து மிகுந்த இந்த பதநீரை ஏறத்தாழ 40 நாள்கள் வரை கெடாமல் பாதுகாப்புடன் வைத்துப் பருகுவதற்கு ஏற்ப, பதப்படுத்தி அடைக்கப்பட்டுள்ள டெட்ரா பேக்' முறையை முதல்வர் கருணாநிதி நேற்று அறிமுகம் செய்தார்.
மேலும், பதநீரில் இருந்து தயாரிக்கப்படும் பனங்கற்கண்டு மிட்டாய், பொடி செய்து நவீனமுறையில் பொட்டலம் செய்யப்பட்டுள்ள பனைவெல்லம் ஆகியவற்றையும் கருணாநிதி அறிமுகப்படுத்தினார்.
பதநீரும் பிற பொருள்களும் இம்முறையில் விற்பனை செய்யப்படுவதன் மூலம் தமிழகம் முழுவதிலும் பதநீர் இறக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள ஏறத்தாழ 32 ஆயிரம் தொழிலாளர்களின் குடும்பங்கள் கூடுதல் வருவாய் பெற்றுப் பயனடைவதற்கு வழிவகுக்கும். இப்புதிய திட்டம் பதநீர்ப் பருவம் தொடங்கும் வரும் நவம்பர் மாதம் முதல் விரிவுபடுத்தப்படும்.
இந்நிகழ்வின்போது, கதர்த்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், கைத்தறி மற்றும் கதர்த்துறை முதன்மைச் செயலாளர் ராஜகோபால் மற்றும் பனை பொருள் வளர்ச்சி வாரிய அலுவலர்கள் உடனிருந்தனர் என்று கூறப்பட்டுள்ளது.
கள் இறக்கக் கோரி தமிழகத்தில் நீண்ட நாட்களாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதுதொடர்பாக கோவை பகுதியைச் சேர்ந்த கள் உற்பத்தியாளர்கள் அமைப்பு போர்க்கொடி உயர்த்தி வருகிறது. இந்த நிலையில் அதிரடியாக பதநீரை அறிமுகப்படுத்தியும், பனைஏறும் தொழிலாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் திட்டத்தையும் தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கள் இறக்க அனுமதி கோரி விடுக்கப்பட்டு வரும் கோரிக்கை குறித்து பரிசீலித்து அரசுக்குப் பரிந்துரைக்க அமைக்கப்பட்ட நீதிபதி சிவசுப்ரமணியம் கமிஷன் தனது அறிக்கையை சமீபத்தில்தான் அரசிடம் சமர்ப்பித்தது. ஆனால் கமிஷன் உறுப்பினர்களிடையே கள் இறக்க அனுமதி தருவது தொடர்பாக ஒருமித்த கருத்து ஏற்டவில்லை. எனவே இதுகுறித்து அகதிகாரிகள் கமிட்டி அமைத்து பரிசீலிக்கப்படும் என தமிழக அரசு கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications