திருமணம் செய்வதாகக் கூறி ரூ. 70,000 மோசடி-போலீஸ்காரர் மீது பெண் போலீஸ் புகார்
சென்னை: திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி, ரூ.70,000 பணத்தை மோசடியாகப் பெற்ற வந்த போலீஸ்காரர் மீது பெண் போலீஸ் ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.
சென்னை மாநகரக் காவல் துறையில் பணி புரிபவர் சுமதி. இவர் பணிபுரிந்த காவல் நிலையத்தில் பணிபுரிந்த ராம் (32) என்பவருக்கும் இவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் இவர்களது பெற்றோர்கள் ஜாதியைக் காரணம் காட்டி காதலுக்கு சிவப்பு கொடி காட்டியுள்ளனர்.
இந்த நிலையில் ராமின் பெற்றோர் அதிக வரதட்சணை கொடுத்தால் திருமணம் செய்து வைப்பதாகக் கூறியுள்ளனர். பெண்ணைப் பெற்றவர்கள் மகளுக்கு அவள் விரும்பிய இடத்தில் திருமணம் நடந்தால் சரி என்று நினைத்து வரதட்சணைக் கொடுக்க ஒத்துக் கொண்டனர். அதன்படி 35 பவுன் நகையும், ரூ. 7 லட்சம் மதிப்புள்ள வீடு ஒன்றையும் தருவதாக ஒப்புக் கொண்டனர் சுகன்யாவின் பெற்றோர்.
இதையடுத்து திருமண ஏற்பாடுகள் நடந்தன. கல்யாண நாளும் வந்தது. ஆனால் மணமகன் வரவில்லை. காரணம் கேட்டதற்கு தந்தையின் உடல் நலம் சரியில்லை என்று கூறியிருக்கிறார். இதே போன்று வெவ்வேறு காரணங்களால் நான்கு முறை திருமணம் நின்றுவிட்டது.
திருமணம் நிச்சயம் நடக்கும் என்று நினைத்திருந்த சுமதி இதனால் வேதனை அடைந்தார். இந்த நிலையில் ராம் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்ய முடிவு செய்தார். இது பற்றி தெரிய வந்ததும் சுமதி, மாநில பெண்கள் ஆணையத்தில் புகார் கொடுத்தார்.
அதில்,
கடந்த 3 ஆண்டுகளாக என்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ராம் என்னை ஏமாற்றிவிட்டார். மேலும், என்னிடம் இருந்து ரூ. 70,000 பெற்றுக் கொண்டு அதையும் திருப்பித் தரவில்லை. எனவே, இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் கூறியிருந்தது.
ஒவ்வொரு மாதமும் திருமணம் தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட புகார்கள் வருகின்றன என்று மாநில மகளிர் ஆணைய தலைவர் சற்குணபாண்டியன் கூறினார்.












Click it and Unblock the Notifications