குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த ஆசாமி-கலெக்டருக்கு லஞ்சம் கொடுத்து ஷாக்!
ராசிபுரம்: குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த நபர், உரிய லைசென்ஸ் எதுவும் இல்லாமல் சிக்கிக் கொண்டார். அப்போது அதிலிருந்து தப்ப அங்கு நின்றிருந்த நாமக்கல் மாவட்ட கலெக்டர் சகாயத்திடம் 100 ரூபாய் நோட்டைக் கொடுத்து இதை லஞ்சமாக வைத்துக் கொண்டு ஆளை விடுங்கள் என்று கூறி அதிர்ச்சி அளித்தார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உ. சகாயம். தமிழகத்திலேயே முதல் முறையாக சொத்துக் கணக்கை பகிரங்கமாக வெளியிட்ட முதல் ஐஏஎஸ் அதிகாரி. மிகவும் நேர்மையானவர் என மக்களால் பாராட்டப்படுபவர். மிக மிக எளிமையானவர்.
இவர் ராசிபுரம் அருகிலுள்ள மசக்காளிப்பட்டியில் உள்ள மகளிர் கல்லூரி ஆசிரியர் தினவிழாவில் பங்கேற்க, அரசு வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தார். வாகனம் தேசிய நெடுஞ்சாலை- நான்குவழிச் சாலையில் பொம்மக்குட்டை மேடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், குடிபோதையில் தட்டுத் தடுமாறியபடி குறுக்கே வந்துள்ளனர். சுதாரித்துக்கொண்டு காரை நிறுத்தினார், கலெக்டரின் ஒட்டுநர். இதனால் விபத்து தவிர்க்கப்பட்டது.
பின்னர் குடிபோதையில் இருந்த இரு சக்கர வாகனஓட்டியை அழைத்து அறிவுரை கூறிய ஆட்சியர், ஓட்டுநர் உரிமம் உள்ளதா என்று சோதனை நடத்தினார். அவரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லாததால், மோட்டார் வாகன ஆய்வாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதனால், பதறிப்போன இரு சக்கர வாகனம் ஓட்டிவந்த குடிமகன், தனது பாக்கெட்டில் இருந்த நூறு ரூபாயை எடுத்து மாவட்ட ஆட்சியருக்கு கொடுத்து, தன்னை விட்டும்விடும்படி கேட்டுள்ளார்.
இதைப் பார்த்த கலெக்டருக்கு கடும் கோபம் வந்து விட்டது. காரிலிருந்து இறங்கிய அவர் பைக் சாவியை எடுத்துக் கொண்டு, வண்டியை ஓரமாக நிறுத்த உத்தரவிட்டார். பின்னர் மோட்டார் வாகன ஆய்வாளரை உடனடியாக வருமாறு கூறி அவரிடம் வண்டியையும், சாவியையும் ஒப்படைத்து விட்டுக் கிளம்பினார்.
பின்னர் கல்லூரி விழாவுக்கு தாமதமாக சென்றார். அங்கு போய் முதல் வேலையாக இந்த சம்பவத்தைக் கூறி வேதனைப்பட்டார்.












Click it and Unblock the Notifications