அதிமுகவினர் தாக்கப்பட்டால் நான் சும்மா இருக்க மாட்டேன்: ஜெயலலிதா எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவினர் மீது ஆளும் கட்சியினர் தாக்குதல் நடத்துவது இனியும் தொடர்ந்தால் அதைப் பார்த்துக் கொண்டு நான் சும்மா இருக்க மாட்டேன் என்று கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொடநாட்டில் இருந்தபடி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்லூரி நிகழ்ச்சி தொடர்பாக சில பணிகளில் ஈடுபட்டிருந்த போது, திருடன் ஒருவரைப் பிடித்துள்ளனர்.

அந்த சமயத்தில், அப்பகுதிக்கு வந்த போக்குவரத்து தலைமைக் காவலர் குமரவேல் சட்டக்கல்லூரி மாணவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி, சரமாரியாக தாக்கி காயப்படுத்தி இருக்கிறார்.

திருச்சியில் திருடனுக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறை, புதுக்கோட்டையில் ஆளும் கட்சியினருக்கு ஆதரவாக செயல்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியத்தில் திமுகவினர் நடத்திய கூட்டத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காவல் துறையின் அனுமதி பெற்று அதிமுக சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் கழகத்தைச் சேர்ந்த அன்பழகன் என்பவர் பேசியுள்ளார்.

திமுக ஊராட்சி ஒன்றிய குழு தலைவரும், ஒன்றிய திமுக செயலாளருமான ராஜு தலைமையில் 9 குண்டர்கள் அன்பழகனை ஆயுதங்கள் கொண்டு தாக்கியுள்ளனர். இது சம்பந்தமாக அதிமுக சார்பில் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு சிலரை காவல் துறை கைது செய்திருந்தாலும், அவர்கள் மீது மிகவும் சாதாரண பிரிவுகளில் மட்டுமே வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில், இந்த தாக்குதலை தலைமையேற்று நடத்திய பொன்னமராவதி திமுக ஒன்றியச் செயலாளர் ராஜு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

முதல்வர் கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் துறை, திருடர்களுக்கும், ரெளடிகளுக்கும் ஆதரவாக செயல்பட்டு வருவதற்கும், சமீப காலமாக காவல் துறையினர் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதற்கும் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பழகன் மீது தாக்குதல் நடத்திய பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத் தலைவரை உடனடியாக கைது செய்யவும், இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யுமாறும் காவல் துறையினரை கேட்டுக்கொள்கிறேன்.

அதிமுக உடன்பிறப்புகள் மற்றும் மாணவர்கள் தாக்கப்படும் நிகழ்வுகள் இனியும் தொடருமேயானால், அதைப் பார்த்துக் கொண்டு நான் சும்மா இருக்க மாட்டேன் என்பதை அரசுக்கு எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+