மாணவி ஜோதி தற்கொலை-அண்ணா பல்கலை.மாணவர்களிடம் போலீஸ் விசாரணை
சென்னை: ராகிங் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் மாணவி ஜோதி வழக்கில், அண்ணா பல்கலைக்கழக மாணவ, மாணவிகளிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் முள்ளுக்குறிச்சியை சேர்ந்தவர் மாதவன். இவருடைய மகள் ஜோதி (18). நன்கு படித்து நல்ல மதிப்பெண் பெற்றதால் இவருக்கு சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பிஇ இ.சி.இ. படிப்பு கிடைத்தது. இதையடுத்து சேர்ந்து படித்து வந்தார்.
கடந்த 31 மற்றும் 1 தேதிகளில் விடுமுறை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சில மாணவர்கள் தன்னை கேலியும் கிண்டலும் செய்வதாகவும் எனவே இனிமேல் நான் அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்க செல்ல மாட்டேன் என்று கூறியதாகவும் அவரை அவரது அண்ணன் தீபக் சமாதானப்படுத்தியும் மனம் வெந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசில் புகார் செய்யப்பட்டது.
ஆங்கிலம் பேசத் தெரியாததால் தனது தங்கையா ராகிங் செய்துள்ளனர். இதனால்தான் அவர் இறந்து விட்டார் என்று தீபக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையடுத்து போலீஸார் சென்னை வந்து அண்ணா பல்கலைக்கழக மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறுகையில்,
மாணவி ஜோதி இறந்தது தொடர்பாக விசாரணை நடத்த சேலத்தில் இருந்து ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் 2 போலீசார் வந்து இருந்தனர். சென்னையில் இருந்தும் ஒரு போலீஸ்காரர் வந்து இருந்தார்.
இவர்கள் என்னிடம் வந்து சில விவரங்களை கேட்டறிந்தனர். என்னுடன் கிண்டி என்ஜீனீயரிங் கல்லூரி டீன் மற்றும் விடுதி வார்டன், இருப்பிட கவுன்சிலர் ஆகியோர் இருந்தனர். அவர்களிடமும் போலீசார் விசாரித்தனர்.
பின்னர் மாணவி ஜோதி தங்கி இருந்த விடுதி அறைக்கு சென்று பார்வையிட்டனர். ஜோதியின் புத்தகங்கள், மற்றும் உடமைகளை பார்த்தனர். ஜோதியின் அறையில் உள்ள மாணவிகளிடம் விசாரித்தனர். அதைத்தொடர்ந்து ஜோதி படித்த வகுப்பறைக்கு சென்று அவர் அருகில் அமர்ந்து இருக்கக்கூடிய மாணவிகள் மாணவர்கள் ஆகியோரிடம் விசாரித்தனர். மொத்தத்தில் 30-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளிடம் விசாரணை நடந்தது.
அண்ணாபல்கலைக்கழக வளாகத்தில் ராக்கிங் நடந்திருக்க வாய்ப்பில்லை. மாணவர்கள் ராக்கிங்கில் ஈடுபட்டால் அவர்களின் படிப்பு அவ்வளவுதான் என்று எச்சரிக்கை செய்துள்ளோம் என்றார்.
மாணவி ஜோதியின் செல்போன் உரையாடல்களையும் போலீஸார் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர். அவருடன் கடைசியாக பேசியது யார் என்பதை அறிய போலீஸார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
ராகிங் காரணமாக தற்கொலையா அல்லது காதல் விவகாரம் அல்லது குடும்பப் பிரச்சினை காரணமாகவா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications