ஸ்டாலின் மருமகன் தொடர்ந்த மானநஷ்ட வழக்கு-ஜெ. நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த புகார் மனுவுக்கு அக்டோபர் 15ம் தேதி ஜெயலலிதா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, போலி மருந்து வழக்கில் கைதான மீனாட்சிசுந்தரத்திற்கும் சபரீசனுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாகவும்,
மீனாட்சிசுந்தரம், சபரீசனுக்கு கார் வாங்கிக் கொடுத்திருப்பதாகவும், இதனால் தான் மீனாட்சி சுந்தரத்தை காப்பாற்ற சபரீசன் முயற்சி செய்கிறார் என்றும் குற்றம் சாட்டினார்.
இதையடுத்து ஜெயலலிதாவுக்கு சபரீசன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். அதில், ஜெயலலிதாவின் குற்றச்சாட்டு தவறானது. இனி என் மீது இது போன்ற அவதூறாக குற்றச்சாட்டு கூறக் கூடாது, கூறினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று சபரீசன் தனது நோட்டீசில் கூறியிருந்தார்.
ஆனால் பின்னர் திருச்சியில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, மீண்டும் இதே குற்றச்சாட்டைக் கூறினார்.
இதையடுத்து ஜெயலலிதா மீது சென்னை தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் சபரீசன் மான நஷ்ட வழக்கு தொடந்துள்ளார்.
இந்தப் புகார் மனுவுக்கு ஜெயலலிதா அக்டோபர் 15ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
துரைசாமி மகன் திருமண விழாவில் ஜெ:
இதற்கிடையே மனித நேயம் அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் திருமணம் வரும் 12ம் தேதி கரூரில் நடக்கிறது.
இதைத் தொடர்ந்து சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. கல்லூரி வளாகத்தில் 18ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஜெயலலிதா கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்.