ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு கோரி உள்துறை செயலாளரிடம் அதிமுக மனு
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கக் கோரி அக் கட்சியின் சார்பில் தமிழக உள்துறைச் செயலாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன், வட மற்றும் தென் மாவட்டச் செயலாளர்கள் சேகர்பாபு, செந்தமிழன் ஆகியோர் உள்துறைச் செயலாளர் ஞானதேசிகனை தலைமைச் செயலகத்தில் சந்தித்து இந்த மனுவை அளித்தனர்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய செங்கோட்டையன்,
முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஜெயலலிதாவுக்கு மிரட்டல் கடிதம் முதலில் அனுப்பப்பட்டது. இதுபற்றி விசாரிக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறைச் செயாளர் ஆகியோருக்கு கடிதங்கள் கொடுக்கப்பட்டன.
அதே போலவே, ஜெயா தொலைக்காட்சி சார்பிலும் சென்னை காவல்துறை ஆணையர் மற்றும் காவல் துறைத் தலைவருக்கும் மனுக்கள் அளிக்கப்பட்டன.
இந் நிலையில், வழக்கறிஞரும், மதுரை மாவட்ட அதிமுக தொழிற்சங்க இணைச் செயலாளருமான பசும்பொன் பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சனைகளில் தமிழக அரசு மெத்தனப் போக்குடன் செயல்பட்டு வருகிறது. அதிமுக பொதுச் செயலாளருக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது எனத் தெரியவில்லை.
முன்பு தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் வெங்கட்ராமன் தாக்கப்பட்டார். அப்போது, அவரைப் பார்க்க அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சென்றார்.
அதை திமுகவினர் கேலி பேசினர். அதிமுகவினரே தாக்கி விட்டு ஜெயலலிதாவே அவரை பார்க்கச் செல்வதாகக் கூறினர்.
பின்னர் தா.கிருஷ்ட்டிணன் கொலை வழக்கையும் அவர்களுக்கு தொடர்பு இல்லாதது போலச் சித்திரித்து விட்டனர்.
புரட்சி்த் தலைவிக்கு வந்த மிரட்டல் கடிதங்கள் குறித்து அண்மையில் பேட்டியளித்த காவல் துறை உயரதிகாரி ஒருவர், பிரச்சனையை உருவாக்க வேண்டும் என்று வேண்டுமென்றே இந்தக் கடிதங்கள் அனுப்பப்படுவதாகக் கூறியுள்ளார்.
பிரச்னையை ஆய்வு செய்ய வேண்டிய காவல் துறை அதிகாரி ஒருவரே இவ்வாறு பேசியிருப்பது வேதனை அளிக்கிறது. அரசின் அலட்சியப் போக்கையே இது காட்டுகிறது என்றார்.
போதிய பாதுகாப்பு கொடுத்திருக்கிறோம்-லத்திகா சரண்:
இந் நிலையில் ஜெயலலிதாவுக்கு போதிய அளவுக்கு பாதுகாப்பு கொடுத்திருக்கிறோம் என்று டி.ஜி.பி. லத்திகா சரண் கூறியுள்ளார்.
நிருபர்களிடம் பேசிய அவர், தற்போது தமிழகம் முழுவதும் 1,703 பெண்கள் உள்பட 3,812 பேர் 27 இடங்களில் காவலர் பயிற்சியை முடித்துள்ளனர். இன்னும் 3 ஆண்டுகளில் 25,000 போலீசார் நியமிக்கப்பட உள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
அவர் இசட்' பிரிவு பாதுகாப்பில் இருப்பவர். அவருக்கு போதிய அளவு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவர் செல்லும் இடங்களிலும் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுதான் வருகிறது. அண்மையில் அவர் திருச்சி சென்றிருந்தபோதும் போதுமான அளவுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து அவருக்கு தேவையான போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்படும் எனறார்.












Click it and Unblock the Notifications