ராஜபாளையம் அதிமுக எம்எல்ஏ வெற்றி செல்லும்-சுப்ரீம் கோர்ட்
டெல்லி: ராஜபாளையம் தொகுதி அதிமுக எம்எல்ஏ சந்திராவின் வெற்றி செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் ராஜபாளையம் தனி தொகுதியில் அதிமுக சார்பில் சந்திரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து திமுக வேட்பாளர் வி.பி.ராஜன் 57,827 வாக்குகள் பெற்றார்.
தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்த தங்கமுத்து என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
அதில், சந்திரா தலித் கிறிஸ்தவர் சமுதாயத்தை சேர்ந்தவர். ஆனால் அவர் தன்னை இந்து வகுப்பைச் சேர்ந்தவர் என்று கூறி போலியான ஆவணங்கள் சமர்ப்பித்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதனால் அவரது தேர்தல் வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சந்திரா போலியான ஆவணங்களை தாக்கல் செய்து தனது மதத்தையும், படிப்பையும் மாற்றிக் கொடுத்திருப்பதாகக் கூறி அவரது வெற்றி செல்லாது என்று அறிவித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து சந்திரா உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அதை விசாரித்த நீதிமனறம், சந்திராவின் வெற்றி செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு இடைக் காலத் தடை விதித்தனர். இதையடுத்து வழக்கு தொடர்ந்து நடைபெற்று இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பி்ல், சந்திரா வெற்றி பெற்றது செல்லும் என்று அறிவித்து சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்தனர்.
இதையடுத்து ராஜபாளையத்தில் அதிமுக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications