சென்னை-எஸ்.ஐ. வீட்டில் 42 பவுன் தங்க நகைகள் திருட்டு
சென்னை: சென்னையில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வீட்டில் புகுந்த திருடர்கள் 42 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனர். மேலும் சென்னையில் ஒரே நாளில் 6 இடங்களில் திருட்டுச் சம்பவங்கள் நடந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக பணி புரிபவர் மகாதேவன். புது வண்ணாரப்பேட்டை வெங்கடேசன் தெருவில் வசித்து வருகிறார். இவரது வீட்டின் பீரோ சாவி 20 நாட்களுக்கு முன்பு தொலைந்து போனது. நேற்று புதுசாவி வாங்கிய மகாதேவன் பீரோவை திறந்து பார்த்தார்.
அப்போது பீரோவில் இருந்த 42 பவுன் நகையை காணவில்லை. இது குறித்து மகாதேவன் வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அடுத்தடுத்து 6 திருட்டு:
டெல்லியில் ரயில்வே லஞ்ச ஒழிப்பு துறையில் நிர்வாக இயக்குனராக இருப்பவர் ஜி.வி. ரெட்டி. இவர் தனது மனைவி ஜோதியுடன் சென்னை வந்தார். இருவரும் ஐ.சி.எப். விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்தனர். வெளியில் சென்றுவிட்டு நேற்று இரவு 11.30 மணியளவில் இருவரும் அறைக்கு திரும்பினர்.
2-வது மாடிக்கு சென்று கொண்டிருந்தபோது, வாலிபர் ஒருவர் திடீரென ஜோதியின் மீது பாய்ந்து கழுத்தில் கிடந்த 3 பவுன் செயினை பறித்துச் சென்றார்.
இது குறித்து ஐ.சி.எப். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஐ.சி.எப். விருந்தினர் மாளிகையில் வெளியாட்கள் யாரும் எளிதில் நுழைந்து விட முடியாது. பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். இதை மீறி கொள்ளையன் உள்ளே புகுந்தது மர்மமாக உள்ளது. இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பியூட்டி பார்லரில் ரூ. 50,000 பணம் திருட்டு:
மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் வணிக வளாகம் ஒன்றில் பிரசன்னா என்பவர் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். இவரது கடையின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்று உள்ளனர்.
இதேபோல கொளத்தூரில் வினோஜ் என்பவர் வீட்டில் செல்போன் மற்றும் சில்வர் பாத்திரங்களும் அமைந்தகரையில் ரமேஷ் என்பவர் வீட்டில் 2 பவுன் நகையும் திருட்டு போய் உள்ளது. அடையாறில் ராஜேஸ்வரி என்பவரது வீட்டில் 9 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.
ஒரே நாளில் 6 இடங்களில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.