கடையநல்லூர் பெரியார் சிலையை உடைத்த 4 பேர் கைது
கடையநல்லூர்: கடையநல்லூர் அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்டது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
கடையநல்லூர் அருகே மங்களாபுரம் சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலை கடந்த 1-ம் தேதி சில விஷமிகளால் உடைக்கப்பட்டது. மேலும் அப்பகுதியி்ல் இருந்த காங்கிரஸ் கொடிக் கம்பமும் சேதப்படுத்தப்பட்டது. அவ்வழியே சென்ற அரசு பஸ் மீதும் கல் வீசி தாக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக துரித விசாரணை நடத்த எஸ்.பி. ஆஸ்ரா கார்க் உத்தரவிட்டார்.
சங்கரன்கோவில் டி.எஸ்.பி. தலைமையில் கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் மங்களாபுரத்தைச் சேர்ந்த மாடசாமி மகன் மாரிசெல்வம், சுப்பையா பாண்டியன் மகன் கனகராஜ், மற்றொரு சுப்பையா மகன் ராசய்யா, தங்கையா மகன் பூமாரி ஆகிய 4 பேர் நேற்று தனிப்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில் மதுரை பெருங்குடி அருகே சின்னஉடைப்பு பகுதியில் அமைத்திருந்த இம்மானுவேல் சேகரன் சிலையை கடந்த 31-ம் தேதி சில விஷமிகள் சேதப்படுத்தியதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பெரியார் சிலையை சேதப்படுத்தியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இக்கும்பலுக்கு மங்களாபுரம் செல்லப்பா மகன் ஆனந்த் என்பவர் தலைவராக இருந்து செயல்பட்டுள்ளார். இவர் மலையடிக்குறிச்சி பகுதியிலுள்ள ஒரு கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ஆசிரியர் உள்பட மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications