நீண்ட நாள் நண்பருக்கு உதவிக் கரம் நீட்டிய மு.க. ஸ்டாலின்
ஈரோடு: நண்பரும், முன்னாள் திமுக இளைஞரணி மாநிலத் துணை அமைப்பாளருமான எவரெஸ்ட் கணேசனுக்கு மு.க. ஸ்டாலின் மருத்துவ உதவி செய்து பேருதவி புரிந்துள்ளாராம்.
மு.க. ஸ்டாலின், திருச்சி அன்பில் பொய்யாமொழி, ஈரோடு எவரெஸ்ட் கணேசன் ஆகயோர் ஒரு காலத்தில் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள்.
இதில் அன்பில் பொய்யாமொழி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார்.
இந்த நிலையில் முன்னாள் நண்பரும், முன்னாள் திமுக இளைஞரணி மாநிலத் துணை அமைப்பாளருமான எவரெஸ்ட் கணேசனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரது சிறுநீரகம் செயல் இழந்தது. ஆனால் அதற்கு சிகிச்சை செய்யும் அளவுக்கு அவரிடம் பண வசதி இல்லை.
இதை அறிந்த துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் தானே முன் வந்து, எவரெஸ்ட் கணேசனுக்கு கோவை குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க தேவையான ஏற்பாடுகளைச் செய்தார்.
மேலும், எவரெஸ்ட் கணேசனுக்கு தேவைப்படும் பண உதவியை அளிக்குமாறும் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் ஆகியோருக்கு உததரவிட்டார்.
இதனையடுத்து எவரெஸ்ட் கணேசன் உடல் நலம் தேறி நலமுடன் உள்ளதாக கூறப்படுகின்றது.
நண்பனுக்கு ஓடி வந்து உதவிய துணை முதல்வர் மு.க. ஸ்டாலினின் இந்த நவடிக்கை அவரது நண்பர்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.