முதல்வராக நாளை அர்ஜூன் முண்டா பதவியேற்பு-7 நாளில் மெஜாரிட்டியை நிரூபிக்க கெடு
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில முதல்வராக அர்ஜூன் முண்டா நாளை பதவியேற்கிறார். 7 நாட்களுக்குள் பெரும்பான்மை பலத்தை சட்டசபையில் நிரூபிக்க அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மூன்றாவது முறையாக முதல்வராகிறார் முண்டா என்பது குறிப்பிடத்தக்கது. நாளை முற்பகல் 11 மணிக்கு ஜார்க்கண்ட் மாநிலத்தின் 8வது முதல்வராக அவர் பதவியேற்கவுள்ளார்.
ராஜ் பவனின் பிர்ஸா முண்டா ஆடிட்டோரியத்தில் பதவியேற்பு விழா நடைபெறும்.
முன்னதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சட்டசபைக் கட்சித் தலைவர் ஹேமந்த் சோரன், அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்க தலைவர் சுதேஷ் மகதோ ஆகியோருடன் ஆளுநர் எம்.ஓ.எச்.பாரூக்கை சந்தித்த அர்ஜூன் முண்டா, 11ம் தேதி தான் பதவியேற்க விரும்புவதாக தெரிவித்தார்.
பதவியேற்று 7 நாட்களுக்குள் தனது பெரும்பான்மை பலத்தை சட்டசபையில் நிரூபிக்க வேண்டும் என முண்டாவுக்கு கெடு விதித்துள்ளார் ஆளுநர் என்பது குறிப்பிடத்தக்கது