ரம்ஜான் பண்டிகையை எதிரொலி-மீண்டும் உயர்ந்த கறிக்கோழி விலை
பெரும்பாலும் ஆடிமாதத்தில் அசைவம் உண்பதைத் தவிர்க்கும் மக்கள், ஆடி முடிந்ததும் அசைவத்தை ஒரு பிடி பிடிப்பார்கள். இதனால் ஆடி மாதத்தில் குறைந்திருக்கும் கோழிக் கறி, ஆட்டுக் கறி விலைகள், அதற்கடுத்த மாதத்தில் உயர்ந்துவிடும்.
இந்த ஆண்டும் ஆடி மாதம் கோழிக் கறியின் விலை கிலோ ரூ.130, ரூ.140-ல் இருந்து ரூ.110 ஆகக் குறைந்தது. சென்னையில் ஒரு கிலோ கறிக்கோழி விலை அதிகபட்சமாக ரூ.120-க்கு விற்கப்பட்டது.
தற்போது மீண்டும் விலை உயர்ந்து வருகிறது. ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதால் வழக்கத்தை விட கூடுதலாக ஆடு, பிராய்லர் கோழிகள் சென்னைக்கு வந்துள்ளன.
கறிக்கோழி கிலோ ரூ.130 ஆக உயர்ந்து உள்ளது. சிறிய கடைகளில் ரூ.140-க்கு விற்கப்படுகிறது. இதே விலை நாளையும் இருக்கும் என்று கூறப்படுகிறது. கறிக்கோழி விலை இனி ஏறுமுகத்தில் இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
சென்னைக்கு தினமும் 3 லட்சம் கறிக்கோழிகள் வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை களில் 5 லட்சம் கோழிகள் விற்பனை செய்யப்படுகின்றன. ரம்ஜான் பண்டிகையையொட்டி 7 லட்சம் கறிக்கோழிகள் வந்துள்ளதாக கோழி இறைச்சி மார்க்கெட் வட்டாரங்கள் தெரிவித்தன.