சப்-இன்ஸ்பெக்டரை சுட்டு்க் கொன்ற நபர் மனைவியுடன் தற்கொலை
கூடலூர்: தன்னை கைது செய்ய வந்த சப்-இன்ஸ்பெக்டரை சுட்டுக் கொன்ற நபர் தனது மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கேரள மாநிலம் நிலம்பூர் பகுதி உள்ளது. இதன் அருகே காளிகாவு என்ற இடத்தில் உள்ள காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருந்தவர் விஜய கிருஷ்ணன் ( 53).
இந்த காவல் நிலைய எல்லைக்குள் உள்ள சோக்காடு பகுதியில் வசித்து வரும் முஜிப் (33) என்பவர் மீது பல பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்த வழக்குகள் நிலுவையில் உள்ளன.
நிலம்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கு விசாரணைக்கு முஜிப் ஆஜராகாமல், காலம் கடத்தி வந்ததால் அவரை கைது செய்து, ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் விஜயகிருஷ்ணன் தலைமையில் 3 போலீசார் நேற்று பகல் 1 மணிக்கு முஜிப்பை பிடிக்க சோக்காடு பகுதிக்குச் சென்றனர்.
போலீசாரை கண்டதும் முஜிப் நாட்டு துப்பாக்கியால் சுட்டார். இதில் விஜயகிருஷ்ணனின் நெஞ்சில் குண்டு பாய்ந்து அந்த இடத்திலேயே இறந்தார்.
அவனை மற்ற போலீசார் பிடிக்க முயன்றபோது துப்பாக்கியால் 2 முறை தரையை நோக்கி சுட்டுவிட்டு முஜிப் நிலம்பூர் வனப் பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டான்.
முஜிப்பை பிடிக்க கேரளம் மற்றும் தமிழக போலீசார் உஷார்படுத்தப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது. இந் நிலையில் இன்று காலை முஜிப் தனது மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார்.
மனைவியை சுட்டுக் கொன்ற முஜித், தானும் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.