எங்களுக்கு கூடும் 'கூட்டத்தை' பார்த்து திமுகவுக்கு பயம்: பாஜக
நாகர்கோவில்: திமுகவை வீழ்த்துவது தான் தனது லட்சியம் என்று கூறியுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ள கருத்துக்கு பாஜக வரவேற்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில்,
திமுக ஆட்சி நீடித்தால் தமிழர்களுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் ஆபத்தாகிவிடும். திமுகவை வீழ்த்த, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது.
தற்போது திமுகவை வீழ்த்துவது தான் லட்சியம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இதை பாஜக வரவேற்கிறது.
இலவசம் கொடுத்தும், போதைக்கு அடிமை ஆக்கியும் மக்களை கொள்ளையடித்து வருகின்றனர். வரும் செப்டம்பர் 20ம் தேதி கருணாநிதி குமரி மாவட்டம் வரும்போது, மத்திய அரசின் துணை விளையாட்டு மையம், ஏற்கனவே அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும்.
இந்த இடத்தை மாற்ற கலெக்டர் வற்புறுத்தி வருகிறார். அப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டால், கலெக்டர் அறைக்குள்ளேயே பாஜக போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும்.
கோவையிலும், திருச்சியிலும் அதிமுகவிற்கு கூடிய கூட்டத்தை கண்டு திமுக சார்பில் போட்டி பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது.
நாகர்கோவிலில் கல்வி உதவித் தொகைக்காக பாஜக சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட கூட்டத்தை பார்த்து, திமுக முப்பெரும் விழா நடத்துகிறது.
திமுக ஆட்சியில் அதிகமாக மிரட்டல்களும், தாக்குதல்களும் நடக்கின்றன. அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் உரிய பாதுகாப்பு தர வேண்டும். ஒரு சப் இன்ஸ்பெக்டரை இரண்டு அமைச்சர்கள் கண்முன் வெட்டி கொலை செய்த சம்பவமும் இந்த ஆட்சியில் தான் நடைபெற்றது.
பன்றிக் காய்ச்சலால் தமிழ்நாடு ஸ்தம்பித்து போய் உள்ளது. திமுக, ஆட்சி வெளியேறினால்தான் பன்றி காய்ச்சலும் வெளியேறும் என்றார்.