ஜாதிவாரி கணக்கெடுப்பு: கருணாநிதி தட்டிக் கழிக்கக் கூடாது-ராமதாஸ்
சென்னை: ஜாதிவாரி கணக்கெடுப்பின்போது வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களின் சமூக, பொருளாதார நிலை குறித்த ஆதாரங்களையும் மத்திய அரசு திரட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று சில நாள்களுக்கு முன்பு மத்திய அரசு அறிவித்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை.
வீடு வீடாகச் சென்று மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தும்போதே ஜாதிவாரி கணக்கெடுப்பும் சேர்ந்து நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இதற்கு மாறாக ஜாதிவாரி கணக்கெடுப்பு மட்டும் அடுத்த ஆண்டு தனியாக நடத்தப்படும் என்று மத்திய அரசு இப்போது அறிவித்துள்ளது.
ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்களின் தலைகளை மட்டுமே எண்ணிக் கணக்கெடுப்பது அல்ல. நாட்டில் உள்ள அனைத்து சமூகங்களைச் சேர்ந்தவர்களின் சமூக, பொருளாதார நிலை குறித்த நம்பகமான ஆதாரங்கள் திரட்டப்பட வேண்டும்.
அதன் அடிப்படையிலேயே திட்டங்கள் தீட்டப்பட்டு நாட்டின் வளங்களும், வாய்ப்புகளும் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். இதற்கு உதவும் வகையில்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
ஜாதிவாரி கணக்கெடுப்பின்போது அத்தகைய ஆதாரங்களை திரட்டாவிட்டால் சமூக நீதி கொள்கைகளை செயல்படுத்த இப்போதுள்ள தடைகள் தொடரும்.
எனவே, ஜாதிவாரி கணக்கெடுப்பின்போது வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களின் சமூக, பொருளாதார நிலை குறித்த ஆதாரங்களும் திரட்டப்படும் என்று மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
மேலும், இதற்காக தனியாக கணக்கெடுப்பு நடத்தாமல், மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போதே இந்த விவரங்களையும் திரட்ட வேண்டும்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி, தமிழகத்தில் இப்போதுள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க இன்னும் 9 மாதத்துக்குள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியாக வேண்டும்.
எனவே, மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்தமாறு மத்திய அரசை தமிழக அரசு வற்புறுத்த வேண்டும். இல்லையெனில் தமிழ்நாட்டில் தனியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ரூ. 2,000 கோடி செலவாகும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நமது மாநிலத்தில் மட்டும் தனியாக இந்தக் கணக்கெடுப்பை நடத்த ரூ. 200 கோடிக்கும் குறைவாகவே செலவாகும்.
எனவே, அதிக செலவாகும் எனறு கூறி ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதை முதல்வர் கருணாநிதி தட்டிக் கழிக்கக் கூடாது என்று கூறியுள்ளார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications