234 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெல்லும்: அழகிரி
மதுரை: வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறினார்.
மதுரையைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் மக்கள் குறை கேட்கும் பயணத்தை இன்று தொடங்கிய அவர் புரங்குடி, அச்சம்பத்து, வடிவேல்கரை கீழமாத்தூர், மேலமாத்தூர் ஆகிய பகுதிகளில் பொது மக்களிடம் குறைகளைக் கேட்டார்.
அவரிடம் பொது மக்கள் நேரிலும் மனுக்கள் மூலமாகவும், குறைகளைத் தெரிவித்தனர். மனுக்களைப் பெற்றுக் கொண்டு பிரச்சனைகள் குறித்து விலாவாரியாகக் கேட்ட அழகிரி, அது குறித்து தனது குறிப்பையும் மனுக்களில் எழுதி, அந்தப் பகுதி திமுக நிர்வாகிகளிடம் தந்து, உடனடியாக அதிகாரிகளிடம் சமர்பிக்க உத்தரவிட்டார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், மேலூர் அருகே டயர் தொழிற்சாலை விரைவில் தொடங்கப்படும். பொதுமக்கள் தெரிவிக்கும் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஏழை- எளிய மக்களுக்கு தமிழக அரசு செய்து வரும் உன்னதமான திட்டங்களால், தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என்றார்.